தலையில் கல்லைப்போட்டு வாலிபர் படுகொலை அண்ணன் போலீசில் சரண்


தலையில் கல்லைப்போட்டு வாலிபர் படுகொலை அண்ணன் போலீசில் சரண்
x
தினத்தந்தி 8 Jun 2018 11:34 PM GMT (Updated: 8 Jun 2018 11:34 PM GMT)

களம்பூர் அருகே தலையில் கல்லைப்போட்டு வாலிபர் படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவரது அண்ணன் போலீசில் சரணடைந்தார்.

ஆரணி,

களம்பூரை அடுத்த கஸ்தம்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட தணிகாசலபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சின்னபையன். இவரது மகன்கள் பாலசுந்தரம் (வயது 30), குமார் (28). அண்ணன் - தம்பி இருவருக்கும் திருமணம் ஆகவில்லை.

பாலசுந்தரம், களம்பூரில் உள்ள பால் கூட்டுறவு சங்கத்தில் வேலை செய்து வருகிறார். குமார், சென்னையில் பொக்லைன் எந்திரத்தின் டிரைவராக பணிபுரிந்து வந்தார். இவர்களுக்கு சொந்தமாக அதே பகுதியில் 3 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. நிலத்தில் நெல் பயிரிட்டு இருந்தனர்.

இந்த நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு நெற்பயிர் அறுவடை செய்யப்பட்டது. அதில் கிடைத்த ரூ.35 ஆயிரத்தை குமார் வாங்கிக் கொண்டு சென்னைக்கு சென்றுவிட்டார்.

நேற்று முன்தினம் குமார் தணிகாசலபுரம் கிராமத்தில் உள்ள வீட்டிற்கு வந்தார். அப்போது பாலசுந்தரம், அவரிடம் பணத்தை நீ வாங்கிக்கொண்டு சென்றுவிட்டாயே என்று கேட்டு தகராறு செய்துள்ளார்.

பின்னர் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். அப்போது ஆத்திரம் அடைந்த பாலசுந்தரம் திடீரென கருங்கல்லை தூக்கி குமார் தலை மீது போட்டுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனையடுத்து பாலசுந்தரம் நேற்று காலை களம்பூர் போலீசில் இதுபற்றி தகவல் தெரிவித்து சரணடைந்தார். பின்னர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சாலமோன் ராஜா வழக்குப்பதிவு செய்து, பாலசுந்தரத்தை கைது செய்தார். மேலும் அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story