உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களை உடனே நிரப்பக்கோரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்


உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களை உடனே நிரப்பக்கோரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 8 Jun 2018 11:46 PM GMT (Updated: 8 Jun 2018 11:46 PM GMT)

உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களை உடனே நிரப்பக்கோரி தஞ்சையில் பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

தஞ்சாவூர்,


தஞ்சை மாவட்ட தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் தஞ்சை மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி அலுவலகம் முன்பு நேற்று நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் முரளிதரன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர்கள் மோகன், செந்தில்குமார், குமரகுருபரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் பெரியசாமி வரவேற்றார்.

ஆர்ப்பாட்டத்தில் உபரி என்று காரணம் காட்டி பட்டதாரி ஆசிரியர்களை இடமாற்றம் செய்வதை கைவிட வேண்டும். பள்ளிகள் திறக்கப்பட்ட உடனே உபரி ஆசிரியர்கள் கணக்கிடுவதை தவிர்த்து மாணவர் சேர்க்கை முடித்து அனைத்து பதவி உயர்வுகளையும் வழங்கிய பிறகே உபரி பணியிடம் கணக்கிடப்பட வேண்டும்.

அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை குறைவதற்கு ஆசிரியர்கள் காரணம் அல்ல, தனியார் ஆங்கில பள்ளிகள் புற்றீசல்கள் போல் தொடங்குவதற்கு அனுமதிக்கும் அரசின் கொள்கையே காரணம். கடந்த 3 ஆண்டுகளாக நிரப்பப்படாமல் இருக்கும் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும்.

தலைமை ஆசிரியர் பொறுப்புகளை கவனித்து வரும் மூத்த பட்டதாரி ஆசிரியர்களுக்கு அடிப்படை விதிகளின்படி 20 சதவீதம் ஊதியத்தை அலவன்சாக வழங்க வேண்டும். 2004 முதல் 2006 வரை பணியில் அமர்த்தப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணிநியமன நாளில் இருந்து பணிவரன்முறை செய்து ஆணை வழங்க வேண்டும். பொது இடமாறுதலில் எந்த ஒரு காலிப்பணியிடமும் மறைக்கப்படாமல் நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட சட்ட செயலாளர் நவராஜ், தலைமையிட செயலாளர் பிரகாசம், செய்தி தொடர்புசெயலாளர் ரமேஷ், மகளிரணி செயலாளர் ஜெனட்ஷோபா, மகளிரணி செயலாளர் ஹேமலதா, மாவட்ட இணை செயலாளர்கள் கண்ணன், செந்தில்நாதன் மற்றும் பலர் கலந்துகொண்டனர். முடிவில் மாவட்ட இணை செயலாளர் ராமச்சந்திரன் நன்றி கூறினார்.

Next Story