அதிகரிக்கும் கரியமில வாயு அடர்த்தியும் பாதிப்பும்


அதிகரிக்கும் கரியமில வாயு அடர்த்தியும் பாதிப்பும்
x
தினத்தந்தி 9 Jun 2018 10:47 AM GMT (Updated: 9 Jun 2018 10:47 AM GMT)

பூமியின் வளிமண்டலத்தில் கரியமில வாயு எனப்படும் கார்பன்-டை-ஆக்சைடு அடர்த்தி அதிகரித்து வருகிறது.

பல்வேறு சுற்றுச் சூழல் பாதிப்புகள் இதன் காரணமாக  ஏற்படும் என்று ஏற் கனவே எச்சரிக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில், தற்போது மேலும் ஒரு புதிய பாதிப்பு ஏற்படவிருப்பதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியிருக்கிறது.

அந்தத் தகவல் என்னவென்றால், இந்த நூற்றாண்டின் முடிவில் அதாவது, 2100-ம் ஆண்டுவாக்கில் பூமியில் விளைவிக்கப்படும் அரிசியில் தற்போதும் கிடைக்கும் அளவுக்கு வைட்டமின் பி, புரதங்கள் மற்றும் பிற கனிமப்பொருட்கள் அடங்கியிருக்காது என்று கூறப்படுகிறது.

இதற்கு பிரதான காரணமாக, காற்றில் அதிகரிக்கும் கார்பன் அடர்த்திதான் இருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.

சீனாவில் மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வின் முடிவில் இந்த அதிர்ச்சித் தகவல் வெளியாகி இருக்கிறது.

குறிப்பிட்ட காலப்பகுதியில் விளையும் அரிசியில் வைட்டமின் பி1, பி2, பி5 மற்றும் பி6 ஆகியவையும் பெருமளவில் குறைந்திருக்கும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இதேபோன்ற ஆய்வு ஜப்பானிலும் மேற்கொள்ளப்பட்டது. அப்போது, குறிப்பிட்ட ஆண்டு காலத்தில் புரதம் 10.3 சதவீதம் குறைந்திருக்கும் என்றும், இரும்புச் சத்து 8 சதவீதமும், துத்தநாகச் சத்து 5.1 சதவீதமும் குறைந்திருக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

எதிர்காலம், பல்வேறு சங்கடங்களைத் தரும் சவால் காலம்தான் போலும்! 

Next Story