முதல்-அமைச்சரின் மருத்துவக் காப்பீடு திட்டத்தில் பெண்ணுக்கு எலும்பு மூட்டு அறுவை சிகிச்சை


முதல்-அமைச்சரின் மருத்துவக் காப்பீடு திட்டத்தில் பெண்ணுக்கு எலும்பு மூட்டு அறுவை சிகிச்சை
x
தினத்தந்தி 9 Jun 2018 10:45 PM GMT (Updated: 9 Jun 2018 7:13 PM GMT)

முதல்-அமைச்சரின் மருத்துவக் காப்பீடு திட்டத்தில் பெண்ணுக்கு எலும்பு மூட்டு அறுவை சிகிச்சை செய்து விராலிமலை அரசு மருத்துவமனை சாதனை படைத்தது.

விராலிமலை,

திருச்சி மாவட்டம் மணப்பாறையைச் சேர்ந்தவர் சவரிமுத்து. இவரது மனைவி ரூபி (வயது45). இவருக்கு இரண்டு பக்கங்களிலும் உள்ள இடுப்பு எலும்பு மூட்டு முற்றிலும் சிதைந்துவிட்டது. இதனால்் கடந்த 16 ஆண்டுகளாக மிகுந்த வலியுடன் நடக்கவும், உட்காரவும் முடியாமல்அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்கான சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகளில் ரூ.4 முதல் ரூ.5 லட்சம் வரை செலவாகும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். ஆனால் வறுமையின் காரணமாக ரூபி சிகிச்சைபெற முடியாமல் தவித்து வந்தார். இந்நிலையில் ரூபி, விராலிமலை அரசு மருத்துவமனைக்கு கடந்த 4-ந்தேதி சிகிச்சைபெற வந்தார். அவருக்கு அரசு தலைமை டாக்டர் ஜான்விஸ்வநாத் உரிய மருத்துவபரி சோதனைகளை செய்தார். அப்போது ரூபிக்கு மல்டிபில் எபிபைசியல் டிஸ்பிளோசியா என்ற அபூர்வ எலும்பு சிதைவு நோய் தாக்கி இருப்பதை கண்டறிந்தார்.

இதையடுத்து அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய டாக்டர் ஜான்விஸ்வநாத் முடிவு செய்தார். ரூபிக்கு முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவக்காப்பீட்டு திட்டத்தின் மூலம் அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்ய பட்டது. இதையடுத்து ரூபிக்கு கடந்த 7-ந்தேதி மாலை 3 மணிக்கு அரசு தலைமை டாக்டர் ஜான்விஸ்வநாத் மற்றும் செவிலியர்கள் 2 பேர் கொண்ட குழு அறுவை சிகிச்சையை தொடங்கினர். சுமார் 5½ மணி நேரம் நடந்த இந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக இரவு 8.30 மணிக்கு முடிந்தது.

இதில் ரூபியின் சிதைந்த இடுப்பு எலும்பை அகற்றிவிட்டு இரண்டு பக்கங்களிலும் செயற்கை இடுப்பு எலும்பு பொருத்தப்பட்டது. இன்னும் ஓரிரு நாட்களில் ரூபி எந்தவித வலியும் இன்றி, தனியாக நடக்க ஆரம்பித்து விடுவார் என டாக்டர் ஜான்விஸ்வநாத் தெரிவித்தார். அறுவை சிகிச்சை வெற்றிக்கரமாக செய்த டாக்டர் ஜான்விஸ்வநாத்துக்கு உறவினர்கள் நன்றியை தெரிவித்தனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளிலேயே, இதுபோன்ற அரிய நோயால் பாதிக்கப்பட்டவருக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்தது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. அரசு மருத்துவமனையில் வெற்றிகரமாக எலும்பு மூட்டு அறுவை சிகிச்சை செய்த டாக்டர் மற்றும் செவிலியர்களை பல்வேறு தரப்பினர் பாராட்டி வருகின்றனர். 

Next Story