அரசு விடுதிகளில் சேர மாணவ–மாணவிகள் விண்ணப்பிக்கலாம் மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்


அரசு விடுதிகளில் சேர மாணவ–மாணவிகள் விண்ணப்பிக்கலாம் மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்
x
தினத்தந்தி 9 Jun 2018 9:00 PM GMT (Updated: 9 Jun 2018 7:17 PM GMT)

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அரசு விடுதிகளில் சேர மாணவ–மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்து உள்ளார்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அரசு விடுதிகளில் சேர மாணவ–மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

விடுதிகளில் மாணவ–மாணவிகள் சேர்க்கை

தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழக அரசு சார்பில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ– மாணவிகளுக்கென 35 பள்ளி விடுதிகளும், 3 கல்லூரி, பாலிடெக்னிக், ஐ.டி.ஐ. விடுதிகளும் உள்ளன. பள்ளி விடுதிகளில் 4 முதல் 12 வரை படிக்கின்ற மாணவ– மாணவிகளும், கல்லூரி, பாலிடெக்னிக், ஐ.டி.ஐ. விடுதிகளில் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு மற்றும் பாலிடெக்னிக், ஐ.டி.ஐ. படிக்கும் மாணவ–மாணவிகளும் சேர தகுதியானவர்கள்.

இந்த விடுதிகளில் அனைத்து வகுப்பைச் சேர்ந்த மாணவ– மாணவிகளும் குறிப்பிட்ட விகிதாசார அடிப்படையில் சேர்த்து கொள்ளப்படுகின்றனர். தற்போது இந்த விடுதிகளில் மாணவ– மாணவிகள் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

விண்ணப்பிக்க...

இந்த விடுதிகளில் சேரும் மாணவ– மாணவிகள் அனைவருக்கும் உணவும், தங்கும் வசதியும் அளிக்கப்படும். 10–ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ– மாணவிகளுக்கு சீருடைகள் வழங்கப்படும். 10–ம் வகுப்பு மற்றும் 12–ம் வகுப்பு படிக்கும் மாணவ– மாணவிகளுக்கு சிறப்பு வழிகாட்டிகள் வழங்கப்படும். இந்த விடுதியில் சேர்வதற்கு மாணவர்களின் பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

இந்த விடுதியில் சேர தகுதியான மாணவர்கள், அதற்கான விண்ணப்பத்தை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளரிடமோ அல்லது மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்திலோ இலவசமாக பெற்று கொள்ளலாம்.

கடைசி நாள்

பள்ளி விடுதிகளை பொறுத்தவரை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர், காப்பாளினியிடம் மற்றும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் வருகிற 20–ந்தேதிக்குள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பதை சமர்ப்பிக்க வேண்டும்.

கல்லூரி விடுதியை பொருத்தவரை, சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர், காப்பாளினியிடம் மற்றும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் அடுத்த மாதம் (ஜூலை) 15–ந்தேதிக்குள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

இவ்வாறு மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்து உள்ளார்.


Next Story