பிரதமர் நரேந்திர மோடியிடம் பாராட்டு பெற்ற தூத்துக்குடி பள்ளி மாணவிகளுக்கு மாவட்ட கலெக்டர் வாழ்த்து


பிரதமர் நரேந்திர மோடியிடம் பாராட்டு பெற்ற தூத்துக்குடி பள்ளி மாணவிகளுக்கு மாவட்ட கலெக்டர் வாழ்த்து
x
தினத்தந்தி 9 Jun 2018 9:30 PM GMT (Updated: 9 Jun 2018 7:29 PM GMT)

பிரதமர் நரேந்திர மோடியின் பாராட்டை பெற்ற தூத்துக்குடி பள்ளி மாணவிகளுக்கு மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி வாழ்த்து கூறினார்.

தூத்துக்குடி, 

பிரதமர் நரேந்திர மோடியின் பாராட்டை பெற்ற தூத்துக்குடி பள்ளி மாணவிகளுக்கு மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி வாழ்த்து கூறினார்.

அறிவியல் படைப்பு 

இந்திய அளவில் பள்ளி மாணவ–மாணவிகளின் அறிவியல் கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் வகையில் கண்காட்சிகள் நடைபெற்றது. தேசிய அளவில் நடந்த கண்காட்சியில் தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் உள்ளிட்ட 30 பள்ளிகள் பங்கேற்றன. தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் ஜீவிதா பெத்துலட்சுமி, சுரஜா, கார்மேகராணி ஆகியோர் கண்டுபிடித்த தண்ணீரை சேமித்து பயிர்களுக்கு தேவைப்படும்போது வினியோகிக்கும் தானியங்கி எந்திரம், சூரிய சக்தி மூலம் இயங்கும் புல்வெட்டும் எந்திரம், ரெயில்களில் கழிவறையை சுத்தம் செய்யும் வேக்குவம் கோச் கிளீனர் ஆகிய படைப்புகள் தேசிய அளவில் தேர்வானது.

பாரத பிரதமர் நரேந்திர மோடி, தேசிய அளவில் தேர்வான 30 படைப்புகளின் மாணவர்களுடன் காணொலிக்காட்சி மூலம் கலந்துரையாடி, அவர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்தார். கடந்த 6–ந்தேதி தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் ஜீவிதா பெத்துலட்சுமி, சுரஜா, கார்மேகராணி ஆகியோரிடம் காணொலிக்காட்சி மூலம் பிரதமர் நரேந்திரமோடி கலந்துரையாடி பாராட்டினார்.

வாழ்த்துக்கள் 

பாரத பிரதமர் நரேந்திர மோடியிடம் பாராட்டு பெற்ற, தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் ஜீவிதா பெத்துலட்சுமி, சுரஜா, கார்மேகராணி ஆகியோர் மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரியை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்கள். இதுபோன்ற பல்வேறு அறிவியல் படைப்புகளை கண்டுபிடித்து பொதுமக்கள் பயன்பெற செய்வதோடு, நமது நாட்டிற்கும், மாவட்டத்திற்கு பெருமை சேர்த்திட வேண்டும் என மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி மாணவிகளிடம் தெரிவித்தார்.

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மனோகரன், முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் சங்கரய்யா, சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியைகள் உடன் இருந்தனர்.

Next Story