வேலூரில் ஜாக்டோ அமைப்பினர் ஆர்ப்பாட்டம்


வேலூரில் ஜாக்டோ அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 9 Jun 2018 11:00 PM GMT (Updated: 9 Jun 2018 7:30 PM GMT)

வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ அமைப்பினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

வேலூர்,

தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு (ஜாக்டோ) வேலூர் மாவட்ட கிளையின் சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு பதவி உயர்வுபெற்ற பட்டதாரி மற்றும் தமிழாசிரியர் கழக மாநில பொருளாளர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட தலைவர் கண்ணதாசன், தொடக்க, நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்க மாவட்ட செயலாளர் ஸ்ரீதர், உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சங்க மாவட்ட பொருளாளர் சிவவடிவு ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில துணைச்செயலாளர் சரஸ்வதி வரவேற்றார்.

இதில், சிறப்பு அழைப்பாளர்களாக தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில செயற்குழு உறுப்பினர் இம்மானுவேல்தாஸ், தொடக்க, நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில தலைமை நிலைய செயலாளர் சாமுவேல் ஆகியோர் கலந்துகொண்டு கோரிக்கைகள் குறித்து பேசினார்கள்.

ஆர்ப்பாட்டத்தில், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்த வேண்டும், 7-வது ஊதியக்குழு அறிவித்த ஊதிய உயர்வில் 21 மாத கால நிலுவை தொகையை உடனடியாக அரசு வழங்க வேண்டும், அரசு அமைத்துள்ள ஒரு நபர் குழு ஆசிரியர் இயக்கங்களை அழைத்து பேசி 7-வது ஊதியக்குழுவில் உள்ள முரண்பாடுகளை களைந்திட வேண்டும், அரசு பொதுத்தேர்வை கருத்தில் கொண்டு பி.ஜி. ஆசிரியர்களை பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பது உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள்.

இதில், தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட பொருளாளர் மோகன், பொதுக்குழு உறுப்பினர் சரவணன் உள்பட ஜாக்டோ அமைப்பு நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். முடிவில் ஆதிதிராவிடர் பழங்குடி ஆசிரியர் மற்றும் காப்பாளர் சங்க மாவட்ட தலைவர் பிரின்ஸ் தேவாசீர்வாதம் நன்றி கூறினார்.

Next Story