கல்லாமொழி கடல் பகுதியில் நிலக்கரி இறங்குதளம் அமைக்கும் பணியை நிறுத்த வேண்டும் நாட்டுப்படகு மீனவர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம்


கல்லாமொழி கடல் பகுதியில் நிலக்கரி இறங்குதளம் அமைக்கும் பணியை நிறுத்த வேண்டும்  நாட்டுப்படகு மீனவர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம்
x
தினத்தந்தி 9 Jun 2018 9:00 PM GMT (Updated: 9 Jun 2018 7:37 PM GMT)

கல்லாமொழி கடல் பகுதியில் நிலக்கரி இறங்குதளம் அமைக்கும் பணியை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று தூத்துக்குடி மாவட்ட கட்டுமர நாட்டுப்படகு மீனவர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருச்செந்தூர், 

கல்லாமொழி கடல் பகுதியில் நிலக்கரி இறங்குதளம் அமைக்கும் பணியை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று தூத்துக்குடி மாவட்ட கட்டுமர நாட்டுப்படகு மீனவர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆலோசனை கூட்டம் 

தூத்துக்குடி மாவட்ட கட்டுமர நாட்டுப்படகு சமுதாய மீனவர்கள் சங்க ஆலோசனை கூட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள ஆலந்தலையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு, மாவட்ட தலைவர் கயஸ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் திரேஸ்புரம் ராஜ், ஆலந்தலை ஊர்கமிட்டி தலைவர் அந்தோணி, செயலாளர் ஆசைதம்பி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நியூட்டன் பர்னாண்டோ வரவேற்றார்.

கூட்டத்தில், வேம்பார் முதல் பெரியதாழை வரை 27 மீனவ கிராங்களில் உள்ள பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு:–

நிலக்கரி இறங்குதளம் 

தமிழகத்தில் 95 சதவீத பாரம்பரிய மீனவர்களை பாதுகாக்கும் வகையில், தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குமுறை சட்டப்படி பதிவு செய்துள்ள விசைப்படகுகள் மட்டுமே கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டும். அரசு விதிமுறைக்கு மாறாக, முறையாக பதிவு செய்யாத விசைப்படகுகள் உடனடியாக அகற்றப்பட வேண்டும். முறையாக பதிவு செய்யாத விசைப்படகுகள் மீன்பிடிக்க சென்றால், மாவட்டத்தில் உள்ள 27 கிராமங்களில் சுமார் 5 ஆயிரம் நாட்டுப்படகுகள் மீன்பிடிக்க செல்லாமல், அன்றைய தினம் மாவட்ட கலெக்டர் மற்றும் மீன்துறை இணை இயக்குனரிடம் நேரில் சென்று புகார் செய்யப்படும்.

உடன்குடி அனல் மின்நிலையம் அமைப்பது குறித்து மீனவர்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடந்த வேண்டும் என்று திருச்செந்தூர் உதவி கலெக்டரிடம் மீனவர்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. கருத்த கேட்பு கூட்டம் நடத்திய பின்னர்தான் பணிகள் நடக்கும் என்றும், அதுவரை பணிகள் நடைபெறாது என்றும் அதிகாரிகள் உறுதியளித்தனர். மேலும் இதுதொடர்பாக மாவட்ட கலெக்டரிடம் புகார் மனு அளித்தும் எந்த பலனும் இல்லை. எனவே நீர், நிலம், காற்று, கடல், விவசாயம் ஆகியவற்றை பாதிக்கக்கூடிய அனல் மின்நிலைய பணியையும், கல்லாமொழி கடல் பகுதியில் அமைக்கப்படும் நிலக்கரி இறங்கு தளம் அமைக்கும் பணியையும் உடனடியாக நிறுத்த வேண்டும்.

உண்ணாவிரத போராட்டம் 

இந்த கோரிக்கைகளை அரசு கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில், திருச்செந்தூரில் ஒரு நாள் ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும். அதன்பிறகும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும். தற்போது, கல்லாமொழி கடல் பகுதியில் ஆய்வு செய்ய வந்துள்ள விசைப்படகை உடனடியாக அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில், தூத்துக்குடி மாவட்ட நாட்டுப்படகு மீனவர்கள் சங்க முன்னாள் தலைவர் மணப்பாடு மாணிக்கம் நன்றி கூறினார்.

Next Story