மின் கம்பத்தில் ஆடு, மாடுகளை கட்டக்கூடாது அதிகாரி தகவல்


மின் கம்பத்தில் ஆடு, மாடுகளை கட்டக்கூடாது அதிகாரி தகவல்
x
தினத்தந்தி 9 Jun 2018 8:19 PM GMT (Updated: 9 Jun 2018 8:19 PM GMT)

மின் கம்பத்தில் ஆடு, மாடுகளை கட்டக்கூடாது என்று மின்வாரிய செயற்பொறியாளர் கூறினார்.

சேலம், 

சேலம் நகர கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் குணவர்த்தினி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சேலம் தாதுபாய்குட்டை, கடைவீதி, பழைய பஸ்நிலையம், கோட்டை, கலெக்டர் அலுவலகம், அரசு ஆஸ்பத்திரி, செவ்வாய்பேட்டை, முதல் அக்ரஹாரம், மேட்டுத்தெரு, செரிரோடு, பிரட்ஸ் ரோடு, மரக்கடை வீதி, கருங்கல்பட்டி, களரம்பட்டி, குகை, எருமாபாளையம், சீலநாயக்கன்பட்டி, கிச்சிப்பாளையம், பொன்னம்மாபேட்டை, மணியனூர், ஊத்துமலை உள்பட பல்வேறு பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மின் விபத்தினை தவிர்த்து பாதுகாப்பாக இருக்க வேண்டும். அதாவது, தாழ்வாக உள்ள மின் கம்பிகள், சாய்ந்த நிலையில் உள்ள மின் கம்பங்கள், பழுதடைந்த மின் கம்பங்கள், உடைந்து பாதுகாப்பாற்ற நிலையில் உள்ள மின் இணைப்பு பெட்டிகள் போன்ற குறைகளை கண்டறிந்தால் பொதுமக்கள் அதன் அருகில் செல்லாமலும், தொடாமலும் உடனடியாக சம்பந்தப்பட்ட மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மின் கம்பத்தில் ஆடு, மாடுகளை கட்டக்கூடாது. மழைக் காலங்களில் மின்மாற்றி (டிரான்ஸ்பார்மர்), மின் கம்பங்கள், மின் கம்ப இழுவைகள் அருகில் அறுந்து கிடக்கும் மின் கம்பிகளை அருகில் சென்று தொடுதல் கூடாது. பொதுமக்கள் மின் பாதுகாப்பு எச்சரிக்கைகளை கடைபிடித்து விபத்துகளை தவிர்க்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Next Story