நீட் தேர்வை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும்: முதல்–அமைச்சர் நாராயணசாமி வலியுறுத்தல்


நீட் தேர்வை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும்: முதல்–அமைச்சர் நாராயணசாமி வலியுறுத்தல்
x
தினத்தந்தி 9 Jun 2018 11:45 PM GMT (Updated: 9 Jun 2018 8:23 PM GMT)

ஏழை மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைப்பதை தடுக்கும் நீட் தேர்வை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என்று முதல்–அமைச்சர் நாராயணசாமி வலியுறுத்தினார்.

புதுச்சேரி,

முதல்–அமைச்சர் நாராயணசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

புதுவையின் 2018–19ம் ஆண்டுக்கான பட்ஜெட் கோப்பை மத்திய அரசு அனுப்பி வைத்தோம். அதற்கு அனுமதி பெற்று திரும்பி வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து நேரடியாக உள்துறை பொறுப்பு வகிக்கும் மந்திரி பியூஸ் கோயலை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்ற கேட்டுக் கொண்டேன். அவரும் ஒப்புதல் அளித்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள 27 துறைகளில் மத்திய–மாநில அரசுகள் இணைந்து செயல்படுத்தும் 57 திட்டங்களுக்கு ரூ.387 கோடி நிதியுதவி பெறுகிறோம். இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் சில விளக்கம் கேட்டது. நான் டெல்லி சென்று உள்துறை செயலாளர் மற்றும் இணை செயலாளரை சந்தித்து அது குறித்து விளக்கினேன். இன்னும் ஓரிரு நாட்களுக்குள் பட்ஜெட்டிற்கு ஒப்புதல் கிடைக்கும். அதன்பின் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கப்படும்.

மத்திய அரசின் கால தாமதத்திற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். அரசியல் குறுக்கீடு இருப்பதாக கூற முடியாது. பட்ஜெட்டிற்கு ஒப்புதல் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தான் சட்டசபை கூட்டத்தை கூட்டினோம். ஒப்புதல் கிடைக்காததால் கவர்னரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடத்தினோம்.

புதுச்சேரி மாநிலத்திற்கு மத்திய அரசு தரும் நிதியை தொடர்ந்து குறைத்து கொண்டே வருகிறது. 42 சதவீதம் அளித்து வந்த நிதி தற்போது 27 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்தி அதிக நிதியை பெற நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

மாநிலத்தின் வருவாயை அதிகரிக்கச் செய்ய பல முயற்சிகளை எடுத்து வருகிறோம். அதன் அடிப்படையில் கடந்த ஆண்டு பட்ஜெட்டில் குறிப்பிட்டதை விட ரூ.270 கோடி அதிகரித்துள்ளோம். வரும் காலங்களில் சுற்றுலா, கலால் உள்ளிட்ட பல்வேறு துறைகள் மூலம் வருவாயை அதிகப்படுத்த உள்ளோம். கேரளாவைப்போல புதுச்சேரி அரசு பல திட்டங்களை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கின்றது.

நீட் தேர்வு முடிவுகள் வெளிவந்த நிலையில் மருத்துவ கல்லூரியில் இடம் கிடைக்காது என்று தெரிந்ததால் தமிழகத்தில் 2 மாணவிகள் தற்கொலை செய்துள்ளனர். கண்டமங்கலம் அருகே ஒரு மாணவி தற்கொலை முயற்சி செய்துள்ளார். இது வருத்தம் அளிக்கிறது. அவர்கள் சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர்கள். அவர்களால் நீட் தேர்வை எதிர்கொள்ள முடியவில்லை. உண்மையிலேயே நீட் தேர்வு வந்த பின்னர் பல உயிர்கள் பலி ஆகியுள்ளன. இதனால் இளைய சமுதாயங்களை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

பிளஸ்–2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்தபின் மீண்டும் நீட் தேர்வு என்பதை ஏற்க முடியாது. ஏற்கனவே பாடத்திட்டத்தின் மூலம் தேர்வு எழுதி, அதற்கான மதிப்பெண்ணை பெற்றுள்ளனர். எனவே நீட் தேர்வு தேவை இல்லாத ஒன்று. புதுவையில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் அல்லது 5 ஆண்டுகளுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று சட்டசபையில் ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளோம். ஆனால் மத்திய அரசு இதை கண்டு கொள்ளவில்லை

மத்திய மத்திரி நிர்மலா சீத்தாராமன் சென்னை வந்த போது நீட் தேர்வு மரணம் ஒரு மரணமா? என்று கேலியாக பேசியுள்ளார். தமிழக, புதுச்சேரி மாணவர்களின் மன நிலையை புரிந்து கொள்ளாமல் அவர் விமர்சனம் செய்திருப்பது வருந்தத்தக்கது. மருத்துவர் ஆக வேண்டும் என்ற கனவோடு கடினமாக உழைத்து பிளஸ்–2வில் அதிக மதிப்பெண் எடுத்தும் கூட, நீட் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற முடியாமல் மருத்துவர் ஆகும் கனவு தகர்க்கப்படுவது ஏற்க முடியாத ஒன்று. எனவே நீட் தேர்வை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும்.

தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின், பா.ஜ.க. இல்லாத முதல்–அமைச்சர்களை ஒருங்கிணைத்து உச்சநீதிமன்றத்தை அணுகி நீட் தேர்வை எதிர்த்து போராட வேண்டும் என்று கூறியுள்ளார். அதற்கு முழுமையான ஆதரவை நாங்கள் தெரிவிக்கிறோம்.

புதுச்சேரி மாநிலத்தில் பிளஸ்–2 மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கை நடந்த போது சாதாரண, ஏழை, எளிய, கிராமப்புற மாணவர்களுக்கு இடம் கிடைத்தது. எனவே நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தை அணுகவும் தயாராக உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story