பேசும் அழகு.. பேசாத உதடு..


பேசும் அழகு.. பேசாத உதடு..
x
தினத்தந்தி 10 Jun 2018 5:44 AM GMT (Updated: 10 Jun 2018 5:44 AM GMT)

பேச்சுத் திறன் இல்லாதவர்களுக்காக நடந்த அழகுப்போட்டியில் கலந்து கொண்டு அபாரமாக தனது திறமையை நிரூபித்து, இந்த ஆண்டுக்கான ‘மிஸ் இ்ந்தியா’வாக தேர்வு செய்யப்பட்டிருப்பவர், நிஷ்தா துடேஜா.

பொதுவாகவே கேள்வித்திறனற்றவர்கள் வாழ்க்கையில் போராடித்தான் ஜெயிக்கவேண்டியதிருக்கும். அந்த போராட்டத்தில் அவர்களது பெற்றோரும் பெரும்பங்கு வகிக்கவேண்டியதிருக்கும். நிஷ்தாவின் சாதனையிலும் அவரது பெற்றோரின் பங்களிப்பும் குறிப்பிடத்தக்கதாக இருக்கிறது. இவரது தந்தை வேத் பிரகாஷ் துடேஜா ரெயில்வே தலைமை பொறியாளர். தாயார் பெயர் பூனம். இவர்களது இளைய மகள் நிஷ்தா.

“எங்கள் செல்லமகள் நிஷ்தா குழந்தைப் பருவத்தில் சுறுசுறுப்பும் துறுதுறுப்பும் கொண்டவளாக இருந்தாள். எனக்கு அவ்வப்போது பணிமாற்றம் ஏற்பட்டுக்கொண்டிருந்தது. நான் கவுகாத்தியில் பணி புரிந்து கொண்டிருந்த போது குழந்தைக்கு இரண்டு வயதானது. அப்போதும் குழந்தை பேசாததால் அங்குள்ள ஈ.என்.டி. டாக்டரிடம் குழந்தையை கொண்டுபோய் காட்டினோம். அவர் பரிசோதித்துவிட்டு, ‘சில குழந்தைகள் மூன்று வயதுக்கு மேல்தான் பேசும். அதுவரை பொறுமையாக இருங்கள்’ என்று கூறிவிட்டார். அதனால் அமைதிகாத்த நாங்கள், குழந்தை மூன்று வயதைத் தாண்டிய பின்பும் பேசாததால் டெல்லியில் உள்ள ‘எய்ம்ஸ்’ மருத்துவமனைக்கு கொண்டுபோய் பரிசோதித்தோம். அவர்கள்தான் குழந்தைக்கு கேள்வித்திறன் இல்லை என்பதை உறுதிசெய்தார்கள். அதை கேட்டதும் நாங்கள் அதிர்ச்சியில் உறைந்துபோனோம்..” என் கிறார், வேத் பிரகாஷ்.

முதலில் நவீன காதுகேட்கும் கருவியை பொருத்தியிருக் கிறார்கள். அப்போது நிஷ்தா ஓரளவு கேள்வித்திறனை பெற்றிருக்கிறார். சின்னச்சின்ன வார்த்தைகளை பேசியிருக்கிறார். பின்பு ‘பீச் தெரபி’ கொடுத்திருக்கிறார்கள். அதை தொடர்ந்து அவரது பேச்சுத்திறன் சற்று மேம்பட்டிருக்கிறது. அடுத்து ஆங்கில மீடியம் பள்ளியில் அவரை சேர்த்துள்ளார்கள். வாய்பேச முடியாதவர்களுக்கான சைகை மொழியை நிஷ்தா கற்றுக்கொள்ளவே இல்லை. ஆனால் தற்காப்புக் கலையிலும், விளையாட்டிலும் தன் திறமையை முழுமையாக காட்டவேண்டும் என்று விரும்பியிருக்கிறார்.

ஏழு வயதிலே ஆர்வமாக ஜூடோ கற்றுக்கொள்ளத் தொடங்கியிருக்கிறார். எதிராளியை தாக்கிவீழ்த்தும் அந்த வீரக் கலை அவருக்கு நன்றாகவே கைவந்திருக்கிறது. ஐந்து வருடங்களில் அதில் தேசிய வீராங் கனையாகி, ஏராளமான பதக்கங்களை குவித்தார். அவர் ஜூடோ பயிற்சி பெற்றுக் கொண்டிருந்த மைதானத்தின் அருகிலே டென்னிஸ் விளையாட்டும் நடந்து கொண்டிருந்தது. அதை பார்த்து டென்னிஸ் மீது காதல் கொண்ட நிஷ்தா, அதற்கான பயிற்சியை பெற்றார். ஒரு வருடத்திலே அதில் சிறப்பிடத்தை பெற்று, தொழில்ரீதியான டென்னிஸ் வீராங்கனையானார்.

இ்ந்திய டென்னிஸ் சங்கத்தினர் நடத்திய பல்வேறு போட்டிகளில் பங்கு பெற்ற இவருக்கு, கேள்வித்திறன் இல்லாததால் போட்டியின் நடுவர் சொல்லும் தகவல்களை சரியாக புரிந்துகொள்ள முடியாத சூழ்நிலை உருவானது. அந்த சிரமங்களை தாங்கிக்கொண்டு ெதாடர்ந்து அவர் விளையாட விரும்பினார். சர்வதேச டென்னிஸ் பெடரேஷன் நடத்திய போட்டிகளிலும், கேள்வித் திறனற்றவர்களுக்கான சர்வதேச போட்டிகளிலும் பங்குபெற்றார். அதில் 106-வது இடத்தில் நிஷ்தா இருந்தார். அந்த காலகட்டத்தில் திடீரென்று ஒருநாள் அவருக்கு கீழ்த்தாடையில் கடுமையான வலி ஏற்பட்டது. தொடர்ந்து அந்த வலி கொடுத்த தொந்தரவால் அவரால் டென்னிஸ் விளையாட முடியவில்லை.

அடுத்து என்ன செய்வது? என்ற கேள்விக்கு அவர் தேடிய விடைதான், அழகுப் போட்டி! கேள்வித்திறனற்றவர்களுக்காக மிஸ் இ்ந்தியா அழகுப்போட்டி நடத்தப்படுவது அவர் கவனத்திற்கு வந்த நாளில் இருந்து அதற்காக தன்னை தயார்படுத்தத் தொடங்கினார். அழகுப் போட்டிகளைப் பற்றி தங்களுக்கு பெரிய அளவில் தெரியாது என்றாலும் மகளின் ஆர்வத்துக்கு பெற்றோர் தோள்கொடுத்தார்கள். கடுமையான பயிற்சிக்கு பின்பே அவர் போட்டிக் களத்தில் இறங்கினார். பல்வேறு வகையான உடைகளை அணிந்து ‘ரேம்ப் வாக்’ செய்தது முதல்-கேள்விக்கு பதில் அளித்தது வரை எல்லா கட்டங்களிலும் போட்டி கடுமையாக இருந்தது. அதில் கல்ச்சுரல் ரவுண்ட்டில் நிஷ்தா, தன் முழு திறமையையும்காட்டி நடுவர்களை திகைக்கவைத்தார். ‘ஷன் மாகியா.. ஷன் ஷாதியா..’ என்ற பாடலுக்கு அவர் அற்புதமாக நடனமாடினார். நடனமாடுகிறவர்கள், பாடலை கேட்டு அதற்கு தக்கபடி உடலை அசைத்து ஸ்டெப்களை எடுத்துவைப்பார்கள். ஆனால் நிஷ்தாவுக்கு கேள்வித்திறன் இல்லாததால் அவரால் பாட்டை கேட்க முடியாது அல்லவா!

“பாட்டை கேட்கமுடியாவிட்டாலும் நிஷ்தா எந்த வரிகளுக்கு வேகமாக ஆடவேண்டும், எந்த வரிகளுக்கு மெதுவாக ஆடவேண்டும் என்பதை துல்லியமாக கணித்து சிறப்பாக ஆடினாள். தாளம் தப்பாத அவள் ஆட்டம் அபாரமாக இருந்தது. அவள் பெற்ற கடுமையான பயிற்சிதான் அதற்கு காரணம். நடன அமைப்பாளர் மூலம் அதற்காக இரண்டு மாதங்களாக கடுமையான பயற்சிகளை மேற்கொண்டிருந்தாள். கேள்வி பதில் ரவுண்டில் ‘இ்ந்த போட்டியில் ஜெயித்தால் உங்கள் லட்சியம் என்னவாக இருக்கும்?’ என்று கேட்டார்கள். அதற்கு அவள், ‘என் நாட்டிற்கு உலக அழகி பட்டத்தை கொண்டு வருவதற்கு மிகுந்த ஆர்வமாக இருக்கிறேன்’ என்று பதிலளித்தாள். திறமையோடு அவளிடம் தன்னம்பிக்கையும் இருந்ததால்தான் மிஸ் இந்தியா பட்டத்தை வெல்ல முடிந்தது..” என்று விளக்கம் தருகிறார், வேத் பிரகாஷ்.

கேள்வித்திறன் இல்லாமல் இருப்பது இப்போது நிஷ்தாவை எந்த விதத்திலும் பாதிப்பதில்லை. மற்றவர்கள் பேசும்போது அவர் களின் உதட்டு உச்சரிப்பைவைத்து அவர்கள் என்ன பேசு கிறார்கள் என்பதை உணர்ந்து பதிலளித்துவிடுகிறார். இவரது அண்ணன் ஆதித்யா நாக்பூரில் என்ஜினீயரிங் கற்கிறார். நிஷ்தா தற்போது டெல்லியில் உள்ள ஸ்ரீவெங்கடேஸ்வரா கல்லூரியில் பி.காம். படிக்கிறார். படிப்பிலும் சிறந்து விளங்குகிறார். அதற்கும் அவரது தந்தைதான் காரணம். நிஷ்தா படிக்கவேண்டிய பாடங்களை முதலில் தந்தை படிக்கிறார். அவர் நன்றாக புரிந்து படித்துவிட்டு, பின்பு மகளுக்கு சொல்லிக்கொடுக்கிறார். மகளும் நன்றாக புரிந்துகொண்டு பரீட்சை எழுதி அதிக மதிப்பெண் பெற்றுவிடுகிறார்.

மகளை அளவுக்கு அதிகமாக நேசிக்கும் இந்த தந்தைக்கு, நிஷ்தாைவ யாராவது அனுதாபத்தோடு பார்்த்தால் பிடிக்காது. “அவள் திறமைசாலி.. அவளிடம் இருக்கும் திறமையை மட்டும் பாருங்கள்..” என்கிறார். அது சரிதானே! 

Next Story