பலத்த சூறைக்காற்று: மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் மீது மரம் சாய்ந்து விழுந்ததில் 2 பேர் பலி


பலத்த சூறைக்காற்று: மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் மீது மரம் சாய்ந்து விழுந்ததில் 2 பேர் பலி
x
தினத்தந்தி 10 Jun 2018 11:15 PM GMT (Updated: 10 Jun 2018 6:46 PM GMT)

திருச்சி, மணப்பாறையில் 2-வது நாளாக நேற்றும் பலத்த சூறைக்காற்று வீசியது. மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் மீது மரம் சாய்ந்து விழுந்ததில் 2 பேர் பரிதாபமாக உயரிழந்தனர்.

திருச்சி,

திருச்சியில் நேற்று முன்தினம் பலத்த சூறாவளி காற்று வீசியது. இதனால் ஆங்காங்கே மின்கம்பங்கள், மரங்கள் சாய்ந்தன. விளம்பர பதாககைகளும் சரிந்து விழுந்தன. நேற்றும் 2-வது நாளாக பலத்த சூறைக்காற்று வீசியது. இதன் காரணமாக திருச்சி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மரங்கள் சாய்ந்தன. போக்குவரத்துக்காக வைக்கப்பட்டிருந்த தடுப்புகளும் சாய்ந்தன. சூறைக்காற்றால் வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதே போன்று மணப்பாறையிலும் நேற்று 2-வது நாளாக பலத்த சூறைக்காற்று வீசியது.

இதில் மரம் சாய்ந்து விழுந்ததில் மோட்டார் சைக்கிளில் சென்ற 2 பேர் உடல் நசுங்கி இறந்தனர்.

இது பற்றிய விவரம் வருமாறு:-

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த புத்தாநத்தம் அருகே உள்ள கம்பளியம்பட்டியை சேர்ந்தவர் ராஜூ (வயது 43). இவர் சரக்கு ஆட்டோ வைத்து ஓட்டி வந்தார். கனவாய்பட்டியை சேர்ந்தவர் மனோகர் (41). விவசாயி. இவர்கள் இருவரும் நேற்று மதியம் ஒரு மோட்டார் சைக்கிளில் கருமலை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

மணப்பாறை-துவரங்குறிச்சி சாலையில் புத்தாநத்தத்தை அடுத்த கருஞ்சாலைப்பட்டி அருகே அவர்கள் சென்று கொண்டிருந்த போது பலத்த சூறைக்காற்று வீசியது. அப்போது சாலையோரத்தில் இருந்த புளியமரம் வேரோடு சாய்ந்து மோட்டார் சைக்கிள் மீது விழுந்தது.

இதில் மரத்தின் அடியில் சிக்கிக்கொண்ட அவர்கள் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினர். இதுகுறித்து தகவல் அறிந்த நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள், புத்தாநத்தம் போலீசார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர். உடனடியாக இருவரையும் மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், போகும் வழியிலேயே அவர்கள் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதுகுறித்து புத்தாநத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் காரணமாக மணப்பாறை- துவரங்குறிச்சி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Next Story