திருவண்ணாமலையில் ரெயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும்: பா.ஜ.க. செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்


திருவண்ணாமலையில் ரெயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும்: பா.ஜ.க. செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்
x
தினத்தந்தி 10 Jun 2018 10:30 PM GMT (Updated: 10 Jun 2018 6:58 PM GMT)

திருவண்ணாமலையில் ரெயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என பா.ஜ.க. செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருவண்ணாமலை, 

திருவண்ணாமலை தேனிமலையில் நகர பா.ஜ.க. செயற்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு நகர தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். நகர பொதுச்செயலாளர்கள் ஆறுமுகம், செந்தில்முருகன், நகர துணை தலைவர்கள் முருகேசன், பாலமுரளி உள்பட பலர் முன்னிலை வகித்தனர். ஆர்.சவுந்தர்ராஜன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட தலைவர் எஸ்.நேரு கலந்துகொண்டார். கூட்டத்தில் மாநில பொதுக்குழு உறுப்பினர் கருணாகரன், முன்னாள் நகர தலைவர் சீனுவாசன், நகர செயலாளர்கள் வெங்கடேசன், விஜயகுமார், நரசிம்மன், நகர பொருளாளர் ஆர்.செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் திருவண்ணாமலை அவலூர்பேட்டை சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் உடனடியாக ரெயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும். மழைக்காலம் தொடங்க இருப்பதால் திருவண்ணாமலை நகரில் உள்ள கால்வாய்களை தூர்வாரி சுத்தப்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அருணாசலேஸ்வரர் கோவிலை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி கோவிலை தூய்மையாக வைக்க வேண்டும். பவுர்ணமி மற்றும் விழாக்காலங்களில் நகர் முழுவதும் இறைச்சி கடைகள் திறப்பதை நகராட்சி நிர்வாகம் தடைசெய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Next Story