திருவண்ணாமலை அருகே விவசாயி அடித்துக்கொலை: தந்தை- மகன் கைது


திருவண்ணாமலை அருகே விவசாயி அடித்துக்கொலை: தந்தை- மகன் கைது
x
தினத்தந்தி 10 Jun 2018 10:45 PM GMT (Updated: 10 Jun 2018 6:58 PM GMT)

திருவண்ணாமலை அருகே விவசாயி அடித்துக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக தந்தை-மகனை போலீசார் கைதுசெய்தனர்.

திருவண்ணாமலை, 

இந்த சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

திருவண்ணாமலையை அடுத்த அய்யம்பாளையம் புதூர் பகுதியை சேர்ந்தவர் பச்சையப்பன். இவரது மகன்கள் தேவேந்திரன் (வயது 45), சங்கர் (40). இருவரும் விவசாயிகள் இவர்கள் இருவருக்கும் இடையே நிலப்பிரச்சினை தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று காலை தேவேந்திரன் அவர்கள் குடும்பத்திற்கு பொதுவான கலப்பையை எடுத்துக்கொண்டதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த சங்கரும், அவரது 18 வயது மகனும் சேர்ந்து தேவேந்திரனிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் அது கைகலப்பாக மாறியது. இதில் ஆத்திரம் அடைந்த சங்கரும், அவருடைய மகனும் சேர்ந்து தேவேந்திரனை கம்பால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த தேவேந்திரன் மயங்கி விழுந்தார்.

உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், தேவேந்திரன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதையடுத்து தேவேந்திரனின் உடல் பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இது குறித்த புகாரின்பேரில் திருவண்ணாமலை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து சங்கரையும், அவரது மகனையும் கைது செய்தனர். கொலை செய்யப்பட்ட தேவேந்திரனுக்கு சாரதா என்ற மனைவியும், 3 மகள்களும் உள்ளனர்.

Next Story