சோளிங்கரில் டீயூசனுக்கு சென்ற 10-ம் வகுப்பு மாணவன் ஏரியில் பிணமாக கிடந்த மர்மம்


சோளிங்கரில் டீயூசனுக்கு சென்ற 10-ம் வகுப்பு மாணவன் ஏரியில் பிணமாக கிடந்த மர்மம்
x
தினத்தந்தி 10 Jun 2018 11:15 PM GMT (Updated: 10 Jun 2018 7:12 PM GMT)

சோளிங்கரில் டியூசனுக்கு சென்ற 10-ம் வகுப்பு மாணவன் ஏரியில் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த மாணவனை மர்மநபர்கள் அடித்துக்கொன்று பிணத்தை ஏரியில் வீசியிருப்பதாக போலீசில் தந்தை புகார் செய்துள்ளார்.

சோளிங்கர், 

இந்த சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

வேலூர் மாவட்டம் சோளிங்கரை சேர்ந்தவர் நரசிம்மன். தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வருகிறார். இவரது மகன்கள் ராகுல், கார்த்திக் (வயது 14). இதில் 2-வது மகன் கார்த்திக் திருவள்ளூர் மாவட்டம் எஸ்.வி.ஜி.புரத்தில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தான்.

நேற்று முன்தினம் காலையில் மாணவன் கார்த்திக் டியூசனுக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சென்றுள்ளான். அதன் பின்னர் வெகுநேரமாகியும் அவன் வீடு திரும்பவில்லை. அவனை பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. விசாரித்தபோது பிற்பகல் 3 மணியளவில் சோளிங்கர் பஜாரில் தனது நண்பர்களுடன் சுற்றியதாக சிலர் தெரிவித்துள்ளனர்.

நரசிம்மனின் வீடு சோளிங்கர் பேரூராட்சி அருகில் அமைந்துள்ளது. அதன் அருகிலேயே ஒரு ஏரி உள்ளது. இந்த நிலையில் நேற்று காலையில் நரசிம்மனின் மூத்த மகன் ராகுல், அங்குள்ள ஏரிப்பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது தனது தம்பி கார்த்திக் ஏரியில் பிணமாக கிடப்பதை பார்த்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர் அளித்த தகவலின்பேரில் பெற்றோர் மற்றும் உறவினர்கள் விரைந்து சென்று பிணமாக கிடந்த கார்த்திக் உடலை பார்த்து கதறி அழுதனர். இது பற்றிய தகவல் அறிந்ததும் அரக்கோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு குத்தாலிங்கம், சோளிங்கர் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

பின்னர் பிணமாக கிடந்த கார்த்திக் உடல் மீட்கப்பட்டது. அப்போது கார்த்திக் உடலில் காயங்கள் இருந்தன. மூக்கில் இருந்தும் ரத்தம் வழிந்திருந்தது. இதனை பதிவு செய்து கொண்ட போலீசார் முதல் கட்ட விசாரணைக்கு பின்னர் கார்த்திக் உடலை பிரேத பரிசோதனைக்காக சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து மாணவனின் தந்தை நரசிம்மன் சோளிங்கர் போலீசில் புகார் கொடுத்துள்ளார். அதில் மகன் கார்த்திக்கை யாரோ அடித்துக் கொலைசெய்து பிணத்தை ஏரியில் வீசியிருப்பதாக கூறி உள்ளார். இது குறித்து போலீசார் சந்தேக மரணமாக வழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story