குருபரப்பள்ளி அருகே மோட்டார்சைக்கிள் மீது லாரி மோதல்; கேரள என்ஜினீயர் பலி


குருபரப்பள்ளி அருகே மோட்டார்சைக்கிள் மீது லாரி மோதல்; கேரள என்ஜினீயர் பலி
x
தினத்தந்தி 10 Jun 2018 10:45 PM GMT (Updated: 10 Jun 2018 9:11 PM GMT)

குருபரப்பள்ளி அருகே மோட்டார்சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் கேரளாவை சேர்ந்த என்ஜினீயர் பலியானார்.

குருபரப்பள்ளி,

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் கோமாதோலி கிராமத்தைச் சேர்ந்தவர் சுஜித்குமார். இவரது மகன் ஆகாஷ் (வயது 22). என்ஜினீயர். நேற்று முன்தினம் பணி நிமித்தமாக ஓசூர் வந்திருந்த அவர் ஓசூர்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் குருபரப்பள்ளி அருகே மோட்டார்சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.

அந்த நேரம் அந்த வழியாக வந்த லாரி மோட்டார்சைக்கிள் மீது மோதி, விட்டு முன்னால் சென்ற மற்றொரு லாரி மீது மோதியது. இதில் விபத்தை ஏற்படுத்திய லாரி கவிழ்ந்தது. இந்த விபத்தில் மோட்டார்சைக்கிளில் சென்ற ஆகாஷ் மற்றும் விபத்தை ஏற்படுத்திய லாரியை ஓட்டிச் சென்ற கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே உள்ள அரசமரத்துகொட்டாய் பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ் (25) மற்றும் மற்றொரு லாரியை ஓட்டிச் சென்ற தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே உள்ள எலகிரியைச் சேர்ந்த பழனி (50) ஆகிய 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

என்ஜினீயர் பலி

இந்த விபத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து குருபரப்பள்ளி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாவதி மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் ஆகாஷ் பரிதாபமாக இறந்தார். பழனியும், கோவிந்தராஜூம் சிகிச்சை பெற்று வருகிறார் கள்.

மேலும் விபத்துக்குள்ளான லாரிகள் மற்றும் மோட்டார்சைக்கிளை அங்கிருந்து போலீசார் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். இந்த விபத்து தொடர்பாக குருபரப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Next Story