காதலியை திருமணம் செய்வதற்காக கூலிப்படையை ஏவி மனைவி, குழந்தையை கொன்ற வாலிபர் 4 பேர் கைது


காதலியை திருமணம் செய்வதற்காக கூலிப்படையை ஏவி மனைவி, குழந்தையை கொன்ற வாலிபர் 4 பேர் கைது
x
தினத்தந்தி 10 Jun 2018 10:45 PM GMT (Updated: 10 Jun 2018 9:44 PM GMT)

காதலியை திருமணம் செய்வதற்காக மனைவி, குழந்தையை கூலிப்படையை ஏவி கொன்று நாடகமாடிய வாலிபர் மற்றும் அவரது காதலி உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

புனே, 

காதலியை திருமணம் செய்வதற்காக மனைவி, குழந்தையை கூலிப்படையை ஏவி கொன்று நாடகமாடிய வாலிபர் மற்றும் அவரது காதலி உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

காருக்குள் புகுந்து கொலை

புனே மாவல் பகுதியை சேர்ந்தவர் தத்தா வசந்த்(வயது30). இவரது மனைவி அஸ்வினி(25). இவர்களுக்கு 8 மாதத்தில் அனுஷ் என்ற ஆண் குழந்தை இருந்தது. நேற்றுமுன்தினம் மனைவி மற்றும் குழந்தையுடன் தனது மாமனார் வீட்டுக்கு தத்தா வசந்த் சென்றிருந்தார்.

பின்னர் அங்கிருந்து காரில் வீடு திரும்பி கொண்டிருந்தனர். ஹிஞ்சேவாடி பகுதியில் வந்தபோது, தண்ணீர் குடிப்பதற்காக தத்தா வசந்த் காரை நிறுத்தினார்.

அப்போது, அங்கு வந்த 2 பேர் காருக்குள் நுழைந்து அஸ்வினியையும், குழந்தை அனுசையும் கழுத்தை நெரித்து கொலை செய்தனர். தத்தா வசந்தையும் அவர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து தத்தா வசந்த் ஹிஞ்சேவாடி போலீசுக்கு தகவல் கொடுத்தார்.

அதிர்ச்சி தகவல்

போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அஸ்வினி மற்றும் குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து தத்தா வசந்திடம் விசாரணை நடத்தினார்கள்.

அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினார்கள். இதில், அவர் மனைவி மற்றும் குழந்தையை கூலிப்படையை ஏவி கொன்ற அதிர்ச்சி தகவல் வெளியானது. அதன் விவரம் வருமாறு:-

தத்தா வசந்த் திருமணத்துக்கு முன் இளம்பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். திருமணத்திற்கு பின்னரும் அந்த பெண்ணுடனான தொடர்பை விடவில்லை. இந்தநிலையில், இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர்.

4 பேர் கைது

தன்னை திருமணம் செய்துகொள்ள அஸ்வினி மற்றும் குழந்தை இடையூறாக இருக்கும் என அந்த பெண் கூறியிருக்கிறார். இதையடுத்து காதலியின் தூண்டுதலின்பேரில் தத்தா வசந்த் மனைவி மற்றும் குழந்தையை தீர்த்து கட்ட முடிவு செய்தார். இதற்காக ரூ.1 லட்சம் கொடுத்து கூலிப்படையை தயார் செய்து, தனது சதி திட்டத்தை நிறைவேற்றி உள்ளார்.

மேற்கண்ட தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரியவந்தன.

இதையடுத்து போலீசார் தத்தா வசந்த்தை ைகது செய்தனர்.

மேலும் அவரது காதலி மற்றும் கூலிப்படையினர் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

Next Story