நெய்வேலியில் துணிகரம் என்.எல்.சி. அதிகாரி மனைவியிடம் 10 பவுன் நகை பறிப்பு


நெய்வேலியில் துணிகரம் என்.எல்.சி. அதிகாரி மனைவியிடம் 10 பவுன் நகை பறிப்பு
x
தினத்தந்தி 11 Jun 2018 10:45 PM GMT (Updated: 11 Jun 2018 7:26 PM GMT)

நெய்வேலியில் என்.எல்.சி. அதிகாரி மனைவியிடம் 10 பவுன் நகையை பறித்துச் சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

நெய்வேலி

நெய்வேலி புதுநகர் 9-வது வட்டம் ஏ.கே.டி. பிரகாசம் சாலையில் உள்ள என்.எல்.சி. குடியிருப்பில் வசிப்பவர் ரமேஷ். என்.எல்.சி. அதிகாரி. இவரது மனைவி யமுனா (வயது 32). இவர் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக ஒரு மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்து கொண்டிருந்தனர். அவர்கள் யமுனா அருகில் வந்ததும், மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்திருந்த நபர் திடீரென அவரது கழுத்தில் கிடந்த 10 பவுன் நகையை பறித்தார்.

இதில் திடுக்கிட்ட யமுனா திருடன் திருடன் என கூச்சலிட்டார். இந்த சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் அந்த நபர்களை துரத்தினர். இருப்பினும் அவர்கள் தாங்கள் வந்த மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர். பறிபோன நகையின் மதிப்பு ரூ.2 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

இது குறித்து ரமேஷ் நெய்வேலி டவுன்ஷிப் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமார் வழக்குப்பதிவு செய்து, நகையை பறித்துச் சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். வீட்டின் முன்பு நின்ற பெண்ணிடம் மர்மநபர்கள் நகையை பறித்துச் சென்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story