குறைதீர்க்கும் கூட்டத்தில் பட்டா கேட்டு மலைவாழ் மக்கள் மனு


குறைதீர்க்கும் கூட்டத்தில் பட்டா கேட்டு மலைவாழ் மக்கள் மனு
x
தினத்தந்தி 11 Jun 2018 11:00 PM GMT (Updated: 11 Jun 2018 9:26 PM GMT)

குறைதீர்க்கும் கூட்டத்தின்போது பட்டா கேட்டு கலெக்டரிடம், மலைவாழ் மக்கள் மனு அளித்தனர்.

திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. இதற்கு கலெக்டர் டி.ஜி.வினய் தலைமை தாங்கினார். இந்தநிலையில் ஒட்டன்சத்திரத்தை அடுத்த வடகாடு அருகே உள்ள புலிக்குத்திக்காடு பகுதியை சேர்ந்த மலைவாழ் மக்கள் கலெக்டரிடம் ஒரு மனு அளித்தனர்.

அதில், எங்கள் பகுதியில் உள்ளவர்கள் பல தலைமுறைகளாக வசித்து விவசாயம் செய்து வருகிறோம். வனப்பகுதியில் 75 ஆண்டுகளுக்கு மேலாக தலைமுறை அடிப்படையில் வசித்து வருபவர்களுக்கு வன உரிமை சான்று மற்றும் பட்டா வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக எங்கள் பகுதியை சேர்ந்தவர்கள் பட்டா கேட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு அளித்தோம். ஆனால் நாங்கள் அந்த பகுதியில் 75 ஆண்டுகளாக வசித்து வந்ததற்கு போதுமான ஆவணங்கள் இல்லை என்று கூறி அதிகாரிகள் மனுக்களை தள்ளுபடி செய்துவிட்டனர்.

எங்கள் பகுதியில் முன்னோர்கள் வாழ்ந்த குடிசையின் இடிபாடுகள், அடிச்சுவர்கள், நினைவு சின்னங்கள் ஆகியவை உள்ளன. இதனால் எங்கள் பகுதியில் கலெக்டர் நேரடியாக ஆய்வு செய்து பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தனர்.

சாணார்பட்டி அருகே உள்ள ராஜக்காபட்டி, தீத்தாம்பட்டியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், எங்கள் பகுதியில் பொதுமக்களுக்கு கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு, தமிழக அரசு சார்பில் தொகுப்பு வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டன. தற்போது இந்த வீடுகளின் சுவர் மற்றும் மேற்கூரை சேதமடைந்துள்ளது. இதனால் அவ்வப்போது சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுகிறது. எனவே மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பாக, சேதமடைந்துள்ள வீடுகளை சீரமைக்க வேண்டும், என்று கூறப்பட்டிருந்தது.

ஆத்தூர் பகுதியை சேர்ந்த பெண்கள் கொடுத்த மனுவில், நாங்கள் தனியார் நூற்பு மில்லில் வேலை செய்து வருகிறோம். நாங்கள் சுயதொழில் தொடங்க வசதியாக இலவசமாக தையல் எந்திரம் வழங்க வேண்டும், என்று கூறியிருந்தனர்.

தெருவோர வியாபார தொழிலாளர்கள் சங்கத்தினர் கொடுத்த மனுவில், திண்டுக்கல் கோட்டைக்குளம் சாலையில் சுமார் 95 வியாபாரிகள் சாலையோரத்தில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறோம். இந்தநிலையில் அதற் கான ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் வியாபாரிகள் பாதிக்கப்படுவார்கள். எனவே இந்த பகுதியில் உள்ள சாலையோர வியாபாரிகளுக்கு மாநகராட்சி சார்பில் மாத வாடகை நிர்ணயிக்க வேண்டும், என்று கூறப்பட்டுள்ளது.

Next Story