மாநில அளவிலான கபடி போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு, கோப்பை


மாநில அளவிலான கபடி போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு, கோப்பை
x
தினத்தந்தி 11 Jun 2018 10:30 PM GMT (Updated: 11 Jun 2018 9:43 PM GMT)

மாநில அளவிலான கபடி போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு, கோப்பை வழங்கப்பட்டது.

நொய்யல்,

புன்னம்சத்திரத்தில் மாநில அளவிலான ஆண்கள் மற்றும் பெண்களுக்கான தொடர் கபடி போட்டிகள் 2 நாட்கள் நடைபெற்றன. இதில் சென்னை, கன்னியாகுமரி, மதுரை, திண்டுக்கல், ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கரூர், பெரம்பலூர், திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆண்கள் மற்றும் பெண்கள் கபடி குழுவினர் கலந்து கொண்டு விளையாடினார்கள். இறுதி சுற்று போட்டியை போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். இதில் வெற்றி பெற்ற ஆண்கள் அணியை சேர்ந்த சேலம் மாவட்டம், தம்மம்பட்டி லக்கிஸ்டார் ஆண்கள் அணிக்கு முதல் பரிசு ரூ.30 ஆயிரமும், ரூ.20 ஆயிரம் மதிப்பிலான கோப்பையும், பெரம்பலூரை சேர்ந்த வானவில் அணிக்கு 2-ம் பரிசு ரூ.25 ஆயிரமும், ரூ.15 ஆயிரம் மதிப்பிலான கோப்பையும், சென்னையை சேர்ந்த தபால்துறை அணிக்கு 3-ம் பரிசு ரூ.20 ஆயிரமும், ரூ.12 ஆயிரம் மதிப்பிலான கோப்பையும், திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே சித்தூரை சேர்ந்த ஆர்.எஸ்.பிரதர்ஸ் அணிக்கு 4-ம் பரிசு ரூ.15 ஆயிரமும், ரூ.10 ஆயிரம் மதிப்பிலான கோப்பையும் வழங்கப்பட்டது.

அதேபோல் பெண்கள் அணியை சேர்ந்த திண்டுக்கல் ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த எஸ்.எம்.சி. அணிக்கு முதல் பரிசு ரூ.15 ஆயிரமும், ரூ.15 ஆயிரம் மதிப்பிலான கோப்பையும், திருச்சியை சேர்ந்த அழகுசெவன் அணிக்கு 2-ம் பரிசு 10 ஆயிரமும், ரூ.10 ஆயிரம் மதிப்பிலான கோப்பையும், ராயவேலூரை சேர்ந்த தேவரின் தங்கங்கள் அணிக்கு 3-ம் பரிசு 8 ஆயிரமும், ரூ.8 ஆயிரம் மதிப்பிலான கோப்பையும், நாமக்கலை சேர்ந்த எஸ்.டி.ஏ.டி. அணிக்கு 4-ம் பரிசு ரூ.7 ஆயிரமும், ரூ.7 ஆயிரம் மதிப்பிலான கோப்பையும் வழங்கப்பட்டது. ஆண்கள் அணியை சேர்ந்த தம்மம்பட்டி லக்கிஸ்டார் அணியில் விளையாடிய வரதராஜலு என்பவருக்கு சிறந்த வீரருக்கான 1 பவுன் தங்க நாணயம் வழங்கப்பட்டது. பெண்கள் அணியை சேர்ந்த ஒட்டன்சத்திரம் எஸ்.எம்.சி. அணியில் விளையாடிய ஷோபிகா என்பவருக்கு சிறந்த வீராங்கனைக்கான 1 பவுன் தங்க நாணயம் வழங்கப்பட்டது. போட்டி நடுவர்களாக கோபால், குமரேசன், செல்வக்குமார், காளிதாஸ், சபாபதி ஆகியோர் செயல்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. கபடி போட்டிக்கான ஏற்பாடுகளை புன்னம்சத்திரம் பி.என்.ஆர். பிரதர்ஸ் கபடி குழுவினர் செய்திருந்தனர். 

Next Story