அமைச்சர்களுடன் ஆலோசிக்காமல் கவர்னருக்கு பதில் அளிக்கக் கூடாது: அதிகாரிகளுக்கு நாராயணசாமி கடும் எச்சரிக்கை


அமைச்சர்களுடன் ஆலோசிக்காமல் கவர்னருக்கு பதில் அளிக்கக் கூடாது: அதிகாரிகளுக்கு நாராயணசாமி கடும் எச்சரிக்கை
x
தினத்தந்தி 12 Jun 2018 12:30 AM GMT (Updated: 11 Jun 2018 10:25 PM GMT)

நாங்கள் கோமாளி அரசாங்கம் நடத்தவில்லை. அமைச்சர்களுடன் ஆலோசிக்காமல் கவர்னருக்கு பதில் அளிக்கக் கூடாது என்று அதிகாரிகளுக்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி கடும் எச்சரிக்கை விடுத்தார்.

புதுச்சேரி,

புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

புதுவையில் தற்போது சிலர் வாட்ஸ் அப், பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்களில் உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார்கள். இதை செயல்படுத்தக்கூடாது என்று அமைச்சரவையில் முடிவு செய்தோம். இதுகுறித்த விவரம் மத்திய அரசுக்கும் அனுப்பப்பட்டது.

இந்தநிலையில் வாட்ஸ் அப் மூலம் பொதுமக்கள் புகார் தந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநில நிர்வாகி (கவர்னர் கிரண்பெடி) கூறியுள்ளார். அவருக்கு நிர்வாகம் தெரியாது என்பதை நிரூபித்துள்ளார்.

அவர் வாய்மொழியாகவோ, சமூக வலைதளங்கள் மூலமாகவோ, எழுத்துப்பூர்வமாகவோ எந்த செய்தி அனுப்பினாலும் துறை செயலாளர், தலைமை செயலாளர், சம்பந்தப்பட்ட துறை அமைச்சர், முதல்-அமைச்சரின் ஒப்புதல் பெற்றுதான் அதிகாரிகள் மேல் நடவடிக்கை எடுக்கவேண்டும். இதை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஏற்கனவே சுற்றறிக்கை அனுப்பி உள்ளேன்.

இந்தநிலையில் வாட்ஸ் அப் மூலம் புகார் தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப் படும் என்று மாநில நிர்வாகி கூறியுள்ளார். இதை ஏற்க முடியாது. வாட்ஸ் அப் மூலம் புகார் என்பது புதுவை அரசால் அங்கீரிக்கப்பட்ட முறையல்ல. இதுகுறித்து மாநில நிர்வாகியிடம் நேரடியாகவும், கடிதம் மூலமாகவும் 19 முறை கூறியுள்ளேன்.

கவர்னரை அரசுத்துறை செயலாளர்கள் சந்திக்க செல்லும்முன்பு சம்பந்தப்பட்ட அமைச்சரை சந்தித்து ஆலோசித்துவிட்டுதான் மாநில நிர்வாகிக்கு விளக்கம் அளிக்க வேண்டும். நேரடியாக அதிகாரிகளை அழைத்து கூட்டம்போடும் அதிகாரம் மாநில நிர்வாகிக்கு கிடையாது.

புகார்கள் தொடர்பாக தானே நேரடியாக உத்தரவிடக்கூடாது என்று நாங்கள் கூறியதை மாநில நிர்வாகி புரிந்துகொண்டதாக தெரியவில்லை. இதுதொடர்பாக அரசு நிர்வாக விதிமுறைகளை சுட்டிக்காட்டி கடிதமும் அனுப்பியுள்ளேன்.

மாநில நிர்வாகியிடம் இருந்து விளக்கம் கேட்டு எது வந்தாலும் அதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அமைச்சரிடம் விவாதித்துவிட்டுதான் அரசு செயலாளர்கள் மாநில நிர்வாகியிடம் விளக்கம் அளிக்கவேண்டும். இது சம்பந்தமாக உள்துறை அமைச்சகத்தின் விளக்க கடிதத்தை அதிகாரிகள் முழுமையாக கடைப்பிடிக்க கூறியுள்ளேன். இதனை மீறி அதிகாரிகள் செயல்பட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

சமூக வலைதளங்களில் தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன. குறிப்பாக திருபுவனை பகுதியில் வங்கியில் ரூ.3 கோடி நகைகள் கொள்ளை என்று தகவல் பரப்பப்பட்டது. அதேபோல் என்னைப்பற்றியும் சமூக வலைதளங்களில் தவறாக எழுதினார்கள். பிறரை பழிவாங்கவேண்டும் என்ற அடிப்படையிலேயே இப்படி தகவல்கள் பரப்பப்படுகின்றன. நாங்கள் ஒன்றும் கோமாளி அரசாங்கம் நடத்தவில்லை.

இவ்வாறு முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

காரைக்காலில் தனியார் அமைப்பு சார்பில் நேற்று மாலை இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமை தாங்கி பேசினார். அமைச்சர் கமலக்கண்ணன் எம்.எல்.ஏ.க்கள் கீதா ஆனந்தன், அசனா, முன்னாள் அமைச்சர் சுப்பிரமணியன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் இணை செயலாளர், செயலாளர் பதவிகளில் ஐ.ஏ.எஸ். இல்லாமல், தனியார் நிறுவனங்களில் பணி புரிவோரை நியமிக்க இருப்பதாக, மத்திய அரசு அறிவித்துள்ளது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. கட்சிக்கு தெரிந்த, அமைச்சர்களுக்கு தெரிந்த நபர்களை அரசுத்துறைகளில் கொல்லைப்புறமாக இடம்பெறச் செய்யும் பா.ஜனதா கட்சியின் சூழ்ச்சி இது. இதை புதுச்சேரி அரசு ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது.

வாட்ஸ் அப்பில் புகார் தெரிவித்தால் அல்லது உத்தரவு வழங்கினால் அதனை அரசுத்துறைகள் ஏற்கவேன்டும் என கவர்னர் அறிவித்திருப்பது கண்டனத்திற்குரியது.

இவ்வாறு முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

Next Story