பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம்


பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 12 Jun 2018 10:45 PM GMT (Updated: 12 Jun 2018 7:45 PM GMT)

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் டாஸ்மாக் தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

கோவை,

டாஸ்மாக் மதுக்கடைகளில் பணியாற்றி வரும் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், மாற்றுப்பணி வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாவட்ட டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில் கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதற்கு தி.மு.க. தொழிலாளர் முன்னேற்ற சங்க மாவட்ட தலைவர் கே.ராக்கிமுத்து தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. தொழிற்சங்க மாவட்ட தலைவர் எஸ்.மூர்த்தி, பாட்டாளி மக்கள் கட்சியின் தொழிற்சங்க மாவட்ட தலைவர் டி.சுதீர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் டாஸ்மாக் மதுக்கடை ஊழியர்கள் பலர் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷமிட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தொழிலாளர் முன்னேற்ற சங்க மாநில துணைத்தலைவர் ரத்தினவேலு நிருபர்களிடம் கூறியதாவது:–

தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகளில் மொத்தம் 27 ஆயிரம் பேர் வேலை செய்து வருகிறார்கள். அரசின் வருவாயில் 5–ல் ஒரு பங்கு நிதியை ஈட்டிக்கொடுக்கும் டாஸ்மாக் ஊழியர்களை தொடர்ந்து தொகுப்பூதிய ஊழியர்களாகவே வைத்திருப்பது பாரபட்சமான அணுகுமுறை ஆகும். கடந்த 2003–ம் ஆண்டில் இருந்து தற்போது வரை மேற்பார்வையாளருக்கு ரூ.10,250–ம், விற்பனையாளர் களுக்கு ரூ.8,100–ம், உதவி விற்பனையாளர்களுக்கு ரூ.7 ஆயிரம் தான் வழங்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட்டு உள்ளன. அதில் பணியாற்றி வந்த 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு தற்காலிக ஏற்பாடாக வேறு பகுதியில் உள்ள மதுக்கடைகளிலேயே பணி வழங்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக ஒரு மதுக்கடையில் 7–க்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றும் நிலை இருக்கிறது. எனவே தற்போது நடைபெற்று வரும் சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே டாஸ்மாக் ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story