சட்டமேலவை தேர்தலில் பா.ஜனதா வெற்றி


சட்டமேலவை தேர்தலில் பா.ஜனதா வெற்றி
x
தினத்தந்தி 12 Jun 2018 11:46 PM GMT (Updated: 12 Jun 2018 11:46 PM GMT)

உஸ்மனாபாத்- பீட்- லாத்தூர் உள்ளாட்சி அமைப்பு தொகுதி சட்டமேலவை தேர்தலில் பா.ஜனதா வேட்பாளர் வெற்றி பெற்றார்.

மும்பை,

மராட்டியத்தில் சட்டமேலவையில் காலியான உஸ்மனாபாத்- பீட்- லாத்தூர் தொகுதி உள்பட 6 உள்ளாட்சி அமைப்பு தொகுதிகளுக்கு கடந்த மாதம் 21-ந் தேதி தேர்தல் நடைபெற்றது.

இதற்கிடையே பீட் மாவட்டத்தில் சில உள்ளாட்சி உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து கோர்ட்டு உத்தரவு படி உஸ்மனாபாத்- பீட்- லாத்தூர் உள்ளாட்சி அமைப்பு தொகுதி ஓட்டு எண்ணிக்கை மட்டும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

மற்ற 5 உள்ளாட்சி அமைப்பு தொகுதிகளுக்கு கடந்த மாதம் 24-ந் தேதி நடந்த ஓட்டு எண்ணிக்கையில் பா.ஜனதா, சிவசேனா கட்சிகள் தலா 2 இடங்களையும், தேசியவாத காங்கிரஸ் கட்சி ஒரு இடத்திலும் வெற்றிபெற்றது. காங்கிரஸ் போட்டியிட்ட அனைத்து தொகுதியிலும் தோல்வி அடைந்தது.

இந்த நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உஸ்மனாபாத்- பீட்- லாத்தூர் உள்ளாட்சி அமைப்பு தொகுதிக்கான ஓட்டு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. இதில் பா.ஜனதா கட்சி வேட்பாளர் சுரேஷ் தாஸ் 526 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரிடம் தேசியவாத காங்கிரஸ் கட்சி வேட்பாளர் அசோக் ஜக்தாலே 452 ஓட்டுகள் பெற்று தோல்வியை தழுவினார்.

இந்த தேர்தல் முடிவின் மூலம் 78 உறுப்பினர்களை கொண்ட சட்ட மேலவையில் பா.ஜனதா கட்சியின் பலம் 19 ஆக உயர்ந்து உள்ளது. தேசியவாத காங்கிரசுக்கு 21 உறுப்பினர்கள், காங்கிரசுக்கு 17 உறுப்பினர்கள், சிவசேனாவுக்கு 11 உறுப்பினர்கள் உள்ளனர். 

Next Story