ஸ்ரீவைகுண்டம் தடுப்பணையில் மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி ஆய்வு


ஸ்ரீவைகுண்டம் தடுப்பணையில் மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி ஆய்வு
x
தினத்தந்தி 13 Jun 2018 9:30 PM GMT (Updated: 13 Jun 2018 2:54 PM GMT)

ஸ்ரீவைகுண்டம் தடுப்பணையில் மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி ஆய்வு மேற்கொண்டார்.

ஸ்ரீவைகுண்டம், 

ஸ்ரீவைகுண்டம் தடுப்பணையில் மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி ஆய்வு மேற்கொண்டார்.

கலெக்டர் ஆய்வு 

பொதிகை மலையில் பிறந்து நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களை வளம் கொழிக்க செய்யும் தாமிரபரணி ஆற்றின் கடைசி தடுப்பணை ஸ்ரீவைகுண்டத்தில் அமைந்துள்ளது. ஆங்கிலேயர்கள் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட இந்த தடுப்பணை சுமார் 150 ஆண்டுகள் பழமை வாய்ந்தது ஆகும். இந்த தடுப்பணையில் கடந்த சில மாதங்களாக பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி நேற்று மாலையில் ஸ்ரீவைகுண்டம் தடுப்பணையை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

3 வாரங்களில்... 

ஸ்ரீவைகுண்டம் தடுப்பணையில் விரிசல்களை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் இன்னும் 3 வாரங்களில் நிறைவு பெறும். ஸ்ரீவைகுண்டம் வடகால் பாசனத்தில் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

நெல்லை மாவட்டத்தில் தாமிரபரணி ஆறு உற்பத்தியாகும் இடத்தில் இருந்து 60 கிலோ மீட்டர் தூரம் வரையிலும் ஆற்றங்கரையில் சுத்தம் செய்யும் பணி நடந்தது. அதேபோன்று தூத்துக்குடி மாவட்டத்திலும் தாமிரபரணி நதி பாயும் 35 கிலோ மீட்டர் தூரம் முழுவதும் சுத்தம் செய்யப்படும். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து குளங்களும் முழுமையாக தூர்வாரப்பட்டு குளத்தின் கரைகள் பலப்படுத்தப்படும்.

இவ்வாறு மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறினார்.

அவருடன் தூத்துக்குடி உதவி கலெக்டர் பிரசாந்த், ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் தாமஸ் பயஸ் அருள் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Next Story