அர்ச்சுனாபுரம் ஓடையின் குறுக்கே புதிய தடுப்பணை கட்டவேண்டும் விவசாயிகள் கோரிக்கை


அர்ச்சுனாபுரம் ஓடையின் குறுக்கே  புதிய தடுப்பணை கட்டவேண்டும் விவசாயிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 13 Jun 2018 10:00 PM GMT (Updated: 13 Jun 2018 7:05 PM GMT)

முத்தூர் அருகே அர்ச்சுனாபுரம் ஓடையின் குறுக்கே புதிய தடுப்பணை கட்ட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முத்தூர்,

திருப்பூர் மாவட்டம் முத்தூர்–நத்தக்காடையூர் செல்லும் மெயின் ரோட்டின் குறுக்கே பழையகோட்டை ஊராட்சி எல்லையில் அர்ச்சுனாபுரம் ஓடை செல்கிறது. இந்த ஓடைக்கு மழைக்காலங்கள் மற்றும் பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி பாசன கால்வாய்களில் தண்ணீர் திறந்து விடப்படும் நேரங்களில் வெளியேறும் உபரிநீர் ஆகியவை சேர்ந்து அதிக அளவு நீர் வரத்து ஏற்பட்டு இந்த ஓடையில் செல்லும். இந்த ஓடையில் இருந்து செல்லும் தண்ணீர் புதுவெங்கரையாம்பாளையம் பகுதியில் செல்லும் நொய்யல் ஆற்றில் சென்று கலந்து சென்று வருகிறது.

இந்த அர்ச்சுனாபுரம் ஓடை சுற்றுவட்டார கிராம பகுதிகளில் ஆண்டு தோறும் பல்வேறு காலகட்டங்களாக நஞ்சை சம்பா நெல் மற்றும் மஞ்சள், கரும்பு, வாழை, எள், சூரியகாந்தி, மக்காசோளம், மரவள்ளிகிழங்கு உள்பட பல்வேறு பயிர் சாகுபடிகள், காய்கறி பயிர்கள் சாகுபடி ஆகியவை நடைபெற்று வருகின்றன. இந்த ஓடை பகுதியை சுற்றி உள்ள கிராமங்களில் விவசாயிகளின் கிணறுகள் நீர்மட்டம் மழை பெய்வதை பொறுத்தே உயரும். பின்னர் மழை பெய்வது குறைந்து விட்டால் கிணறுகளின் நீர்மட்டமும் கிடுகிடுவென குறைந்துவிடும்.

மேலும் குட்டப்பாளையம், உழவன்நகர், அர்ச்சுனாபுரம், சாலைத்தோட்டம், சேமலைவலசு, காமராஜ் நகர் ஆகிய கிராமப்பகுதிகளில் பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்கு ஏராளமான ஆழ்குழாய் கிணறுகள் உள்ளன. இந்த ஆழ்குழாய் கிணறுகளின் நீர்மட்டம் உயர்வதற்கு அர்ச்சுனாபுரம் ஓடையில் செல்லும் அதிக அளவு நீரும் பேருதவியாக இருந்து வருகிறது.

மேலும் கிராமப்பகுதி பொதுமக்களுக்கு ஆழ்குழாய் கிணற்றில் இருந்து மின்மோட்டார் மூலம் குடிநீர் எடுக்கப்பட்டு மேல்நிலை குடிநீர்தொட்டிகளில் ஏற்றப்பட்டு அங்கிருந்து குடிநீர் பைப்புகள் மூலம் வீதிகள் மற்றும் வீடுகள் தோறும் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இப்பகுதிகளில் கடந்த 2 ஆண்டுகளாக போதிய பருவமழை பெய்யவில்லை. இதனால் அர்ச்சுனாபுரம் ஓடையிலும் நீர்வரத்து ஏதுமில்லை. இந்த நிலையில் இன்னும் 3 மாதங்களில் இப்பகுதிகளில் வடகிழக்கு பருவமழை பெய்யும் சூழ்நிலை உள்ளது. மேலும் வருகிற ஆகஸ்டு 15–ந்தேதி பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி பாசன பகுதிகளுக்கு நஞ்சை சம்பாநெல் சாகுபடிக்கு தண்ணீர் திறந்துவிடப்பட உள்ளது.

அந்த காலகட்டங்களில் இந்த ஓடையில் எல்.பி.பி பாசன உபரி நீர் மற்றும் மழை நீர் அதிக அளவில் வந்து வெள்ளபெருக்குடன் செல்வதற்கு வாய்ப்புள்ளது. அவ்வாறான நேரங்களில் இந்த ஓடையில் செல்லும் தண்ணீர் வெள்ளம் போல் கரை புரண்டோடி புதுவெங்கரையாம்பாளையம் நொய்யல் ஆற்றுக்கு சென்று வீணாகும் வாய்ப்புள்ளது. மேலும் ஓடையில் சென்று வீணாகும் தண்ணீர் இப்பகுதி விவசாயிகளின் கிணறுகள் மற்றும் கிராமங்களில் உள்ள ஆழ்குழாய் கிணறுகள் ஆகியவற்றுக்கு போதிய நீர்மட்டம் உயர வழிவகை செய்யாமல் செல்லும் வாய்ப்புள்ளது.

எனவே அர்ச்சுனாபுரம் ஓடையின் குறுக்கே புதிய தடுப்பணை கட்டி தண்ணீரை தேக்கி வைத்தால் சுற்றுவட்டார கிராமப்பகுதி விவசாயிகளின் வேளாண் வயல் நிலங்கள் பயன்பாட்டிற்கும் மற்றும் கிணறுகள், ஆழ்குழாய் கிணறுகளின் நீர் மட்டம் உயர்வதற்கும் வாய்ப்புள்ளது. எனவே இந்த அர்ச்சுனாபுரம் ஓடையில் வளர்ந்துள்ள அனைத்து முட்புதர்கள், செடி கொடிகளை அகற்றி நன்கு தூர்வாரி அர்ச்சுனாபுரம் பகுதியிலேயே புதிய தடுப்பணை கட்டிட மாவட்ட நிர்வாகம் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மூலம் உடனடியாக துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று சுற்றுவட்டார கிராமப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story