தனியார் பள்ளியின் பஸ் மோதி மோட்டார்சைக்கிளில் சென்ற வாலிபர் பலி


தனியார் பள்ளியின் பஸ் மோதி மோட்டார்சைக்கிளில் சென்ற வாலிபர் பலி
x
தினத்தந்தி 13 Jun 2018 10:45 PM GMT (Updated: 13 Jun 2018 8:46 PM GMT)

சேதுபாவாசத்திரம் அருகே தனியார் பள்ளியின் பஸ் மோதியதில் மோட்டார்சைக்கிளில் சென்ற வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

சேதுபாவாசத்திரம்,

தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே உள்ள சம்பைபட்டினம் கிராமத்தை சேர்ந்தவர் அபுபக்கர். இவருடைய மகன் அகமது இப்ராகீம் (வயது31). இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். ரம்ஜான் பண்டிகையையொட்டி விடுமுறையில் ஊருக்கு வந்திருந்த அகமது இப்ராகீம், நேற்றுமுன்தினம் மாலை அப்பகுதியில் உள்ள பள்ளிவாசலில் நோன்பு திறந்து, தொழுகை முடித்து விட்டு வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக சேதுபாவாசத்திரத்துக்கு தனது மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

கிழக்கு கடற்கரை சாலையில் சேதுபாவாசத்திரம் அருகே கழுமங்குடா என்ற இடத்தில் சென்றபோது தனியார் பள்ளிக்கு சொந்தமான பஸ் ஒன்று மோட்டார்சைக்கிளின் பின்னால் மோதியது.

இதில் படுகாயம் அடைந்த அகமது இப்ராகீம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த சேதுபாவாசத்திரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அகமது இப்ராகீமின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அகமது இப்ராகீமுக்கு, ரூபியாபேகம் என்ற மனைவியும், 7 மாத பெண் குழந்தையும் உள்ளனர். ரம்ஜான் பண்டிகையை கொண்டாடிவிட்டு வெளிநாடு செல்ல இருந்த நிலையில் வாலிபர் ஒருவர் விபத்தில் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story