ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க கோரி பள்ளியை பூட்டி பெற்றோர்கள் போராட்டம்


ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க கோரி பள்ளியை பூட்டி பெற்றோர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 13 Jun 2018 11:00 PM GMT (Updated: 13 Jun 2018 9:35 PM GMT)

முசிறி அருகே ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க கோரி பள்ளியை பூட்டி பெற்றோர்கள் நடத்திய போராட்டம் பரபரப்பை ஏற்படுத்தியது.

முசிறி,

திருச்சி மாவட்டம் முசிறியை அடுத்த வெள்ளுர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 1-ம்வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை 143 மாணவ,மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு ஒரு தலைமை ஆசிரியர், நான்கு இடைநிலை ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இதில் ஆசிரியை ஒருவர் பள்ளிக்கு சரிவர வருவதில்லை. அடிக்கடி விடுமுறையில் சென்றுவிடுவதாக அப்பகுதி பெற்றோர்கள் குற்றம்சாட்டி வந்தனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட கல்வித்துறை அலுவலர்களுக்கும் பலமுறை புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை என தெரிகிறது.

இதனால் அதிருப்தி அடைந்த பெற்றோர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் நேற்று காலை பள்ளி திறப்பதற்கு முன்பாகவே சென்று தலைமை ஆசிரியர் அறை மற்றும் வகுப்பறை கதவுகளையும் பூட்டு போட்டு பூட்டினர். வழக்கம் போல் பள்ளிக்கு வந்த ஆசிரியர்கள், மாணவர்களும் பள்ளி பூட்டப்பட்டிருந்ததால் பள்ளி வளாகத்திற்கு வெளியே நின்று கொண்டிருந்தனர். அப்போது அங்கிருந்த பெற்றோர்கள் சம்பந்தப்பட்ட ஆசிரியை மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற முசிறி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயசித்ரா அங்கிருந்தவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது பெற்றோர்கள் கோரிக்கை மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். இதையடுத்து சுமார் ஒரு மணி நேரத்திற்கு பின்பு பள்ளி திறக்கப்பட்டு, வழக்கம்போல் பள்ளி இயங்கியது. இப்பள்ளி தொடங்கி அடுத்த வருடம் நூற்றாண்டு விழா கொண்டாடப்படும் நிலையில் பெற்றோர்கள் பள்ளியை பூட்டி போராட்டம் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Next Story