பழனி முருகன் கோவில் சிலை முறைகேடு: இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகள் 2 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி


பழனி முருகன் கோவில் சிலை முறைகேடு: இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகள் 2 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி
x
தினத்தந்தி 13 Jun 2018 10:15 PM GMT (Updated: 13 Jun 2018 9:35 PM GMT)

பழனி முருகன் கோவில் சிலை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள இந்துசமய அறநிலையத்துறை முன்னாள் அதிகாரிகள் 2 பேரின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து தஞ்சை கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

தஞ்சாவூர்,

பழனி தண்டாயுதபாணி சாமி கோவிலில் கடந்த 2004-ம் ஆண்டு நவபாஷாண மூலவர் சிலை சேதமடைந்ததாக கூறி புதிய சிலை தங்கத்தால் வடிவமைக்க முடிவு செய்யப்பட்டது. இந்த சிலையை வடிவமைக்க 10 கிலோ தங்கம் திருத்தணி முருகன் கோவிலில் இருந்து கடனாகப் பெறப்பட்டது. காஞ்சீபுரம் மாவட்டம் கேளம்பாக்கத்தை சேர்ந்த முத்தையா ஸ்தபதி(வயது 77), இந்த சிலையை வடிவமைத்தார்.

சிலை வடிவமைத்ததில் முறைகேடு நடந்ததாக கூறி சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கடந்த மார்ச் மாதம் 24-ந் தேதி வழக்குப்பதிவு செய்து முத்தையா ஸ்தபதி, அப்போதைய பழனி கோவிலின் செயல் அலுவலராக இருந்த ராஜா(66) ஆகியோரை கைது செய்தனர்.

மேலும் இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்களாக கருதப்படும் இந்துசமய அறநிலையத்துறை முன்னாள் உதவி ஆணையர் சென்னை ஆதம்பாக்கத்தை சேர்ந்த தேவேந்திரன்(67), பழனி ஆயக்குடியை சேர்ந்த இணை ஆணையர் புகழேந்தி(60) ஆகியோரை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கடந்த 14-ந் தேதி மே மாதம் கைது செய்து திருச்சி சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் கைது செய்யப்பட்ட இருவரும் ஜாமீன் கோரி தஞ்சை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணை நேற்று மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி சிவஞானம் முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி, வழக்கின் குற்றத்தன்மை மற்றும் அதன் தீவிரம் கருதி 2 பேரின் ஜாமீன் மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். 

Next Story