ஆசிரியை திட்டியதால் பிளஸ்-2 மாணவி, தூக்குப்போட்டு தற்கொலை


ஆசிரியை திட்டியதால் பிளஸ்-2 மாணவி, தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 13 Jun 2018 11:15 PM GMT (Updated: 13 Jun 2018 9:35 PM GMT)

குத்தாலம் அருகே ஆசிரியை திட்டியதால் பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

குத்தாலம்,

நாகை மாவட்டம் குத்தாலம் தாலுகா பழைய கூடலூர் வடக்குத்தெருவை சேர்ந்த கலியபெருமாள் மகள் வள்ளி(வயது 17). இவர், பழையகூடலூர் கிராமத்தில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

மாணவி வள்ளி, சரியாக படிக்கவில்லை என்று கூறி அந்த பள்ளியின் ஆசிரியை ஒருவர் மாணவியை திட்டியதாக தெரிகிறது.

இதனால் மனமுடைந்த மாணவி வள்ளி, நேற்று காலை 7 மணி அளவில் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த பாலையூர் போலீசார் மாணவியின் வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தினர்.

மாணவி வள்ளியின் உடல் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டது. பிரேத பரிசோதனை முடிந்தவுடன் மாணவியின் பெற்றோர் மற்றும் அவரது உறவினர்கள், சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாணவியின் உடலை வாங்க மறுத்தனர்.

மேலும் மாணவி மரணத்துக்கு காரணமான ஆசிரியை மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்ய வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயற்குழு உறுப்பினர் துரைராஜ் தலைமையில் அக்கட்சியினர் மற்றும் மாணவி வள்ளியின் உறவினர்கள் மயிலாடுதுறை அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மறியல் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மயிலாடுதுறை துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேசன் மற்றும் போலீசார், சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது மாணவியின் சாவுக்கு காரணமான பள்ளி நிர்வாகம் மீது உடனே நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணை போலீஸ் சூப்பிரண்டு உறுதி அளித்தார். இதைத்தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த சாலை மறியலால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நேற்று இரவு வரை மாணவி வள்ளியின் உடலை, அவரது உறவினர்கள் வாங்கவில்லை. இதனால் அரசு மருத்துவமனை வளாகத்தில் பதற்றமான சூழல் நிலவியது. சம்பவ இடத்தில் அசம்பாவிதங்களை தவிர்க்க மருத்துவமனை வளாகத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். 

Next Story