மகிழ்ச்சியுடன் பள்ளி செல்வோம்!


மகிழ்ச்சியுடன் பள்ளி செல்வோம்!
x
தினத்தந்தி 14 Jun 2018 11:30 PM GMT (Updated: 14 Jun 2018 10:02 AM GMT)

பள்ளிகள் இனிதே தொடங்கிவிட்டன. ஆனால் பள்ளிக்கு வரும் சில தம்பிகளும், பாப்பாக்களும் அழுது கொண்டிருப்பார்கள். அது தவறாகும்.

பள்ளி என்பது வாழ்க்கைப் பயணத்திற்கு ஒளியூட்டும் இடம். பள்ளி செல்வதை வெறுக்கக்கூடாது. 

ஒரு மாதம் முதல் 2 மாதம் வரை கோடை விடுமுறையை ஜாலியாக அனுபவித்திருக்கிறோம். சுற்றுலா சென்று மகிழ்ந்தோம். உறவினர் வீடுகளுக்குச் சென்று உறவு வளர்த்தோம். டி.வி., ஸ்மார்ட்போன், விளையாட்டு என்று குதூகலமாக இருந்தோம். இப்படி சந்தோஷமாக இருந்துவிட்டு, பள்ளி திறந்ததும் எல்லாவற்றையும் மறந்துவிட்டு பள்ளி செல்வது மனசுக்குள் கொஞ்சம் வருத்தமாக இருக்கலாம். ஆனாலும் பள்ளி செல்வதில் ஒரு ஆனந்தம் இருக்கிறது.

காலையில் எழுந்ததும் காலைக் கடன்கள் முடிக்க வேண்டும், பள்ளி கிளம்ப வேண்டும். பகலில் பள்ளிப்பாடம், மாலையில் வீட்டுப்பாடம் என நிறைய வேலை இருக்கும். விடுமுறையில் சதா பொழுதுபோக்கி மகிழ்ந்துவிட்டு, பள்ளி திறந்ததும் ஒரே ஓட்டமாக இருப்பதும் சிலருக்கு பள்ளி மீது சலிப்பைத் தரலாம்.

இருந்தாலும் பள்ளி செல்வது முக்கியமானது. பாட வகுப்பிலும், பள்ளிச் சூழலிலும்தான் மகிழ்ச்சியாக வாழ்க்கைப் பாடத்தை கற்றுக் கொள்ள முடியும். பள்ளிச்சூழல் மகிழ்ச்சியானது என்பதை பெரியவர்களாக வளர வளர புரி்ந்து கொள்வீர்கள். உங்கள் அம்மாவும், அப்பாவும் மகிழ்ச்சியான பள்ளிப் பருவத்தைப் பற்றி உங்களிடம் பேசி இருப்பார்களே? பள்ளி சென்று ஒழுங்காக படிக்காத பக்கத்துவீட்டு மாமாவின் கதையையும் உங்களுக்குச் சொல்லியிருப்பார்களே; படிக்காத அந்த மாமா தினம் தினம் கடினமான வேலை செய்வதையும், மகிழ்ச்சி இல்லாமல் வாழ்வதையும் நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? ஆம், பள்ளி சென்று படிப்பதுதான் நல்ல எதிர்காலத்தை உருவாக்கும். எனவே பள்ளி செல்வதை வெறுக்கக்கூடாது.

பள்ளிக்கு செல்வதால் நீங்கள் புதிய நண்பர்களைப் பெறலாம். ஏற்கனவே கடந்த ஆண்டு பழகிய நண்பர்களையும் கோடை விடுமுறைக்குப் பின்பு சந்திக்கலாம். அவர்களிடம் கோடை விடுமுறை அனுபவங்களை பகிர்ந்து மகிழ்ச்சி கொள்ளலாம். நீங்கள் சுற்றுலா சென்றபோது நடந்த சுவையான சம்பவங்கள், நீங்கள் கண்டு ரசித்த இடங்கள், உண்டு புசித்த உணவுகள் எல்லாவற்றையும் ஜாலியாகப் பேசி மகிழலாம்.

மீண்டும் பள்ளிக்குப் புறப்படுவதால் நீங்கள் ஆசைப்பட்டுக் கேட்டதையெல்லாம் பெற்றோர் வாங்கிக் கொடுத்திருப்பார்கள் இல்லையா? புதிய பேக், ஷூ முதல் பேனா, பொம்மை வரை நீங்கள் கேட்டதெல்லாம் கிடைத்திருக்குமே. அதுவே ஆசையுடன் உங்களை பள்ளி செல்லத் தூண்டியிருக்குமே. பெற்றோர் வாங்கித் தந்த புதிய புத்தகப்பையை மாட்டிக்கொண்டு ஜாலியாக பள்ளிக்குப் புறப்படுங்கள். பள்ளிக்குப் போனால் நான் கேட்டதெல்லாம் அப்பாவும் அம்மாவும் வாங்கித் தருவார்கள் என எல்லோரிடமும் மகிழ்ச்சியுடன் சொல்லுங்கள். நன்றாகப் படித்தால் நினைத்ததெல்லாம் வாழ்வில் கிடைக்கும் என்பதையும் நினைவில் வைத்துக் கொண்டு நன்றாகப் படியுங்கள்.

ஆசிரியை அடிப்பார் என அஞ்ச வேண்டாம். உங்களை நல்வழிப்படுத்தவே ஆசிரியர் கண்டிப்புடன் நடந்து கொள்வார். நீங்கள் நல்லவிதமாக நடந்து கொண்டால் உங்களை ஆசிரியர் திட்டவே மாட்டார். நீங்கள் சமத்தாக நடந்துகொண்டு, வகுப்பில் சேட்டை செய்யாமல், வீட்டுப்பாடங்களை ஒழுங்காக முடித்துக் கொண்டு சென்றால் ஆசிரியர் உங்களுக்கு ‘வெரிகுட்’ மற்றும் ‘ஸ்டார்’ வழங்கி பாராட்டுவார்களே, தவிர உங்களிடம் கடுமையாக நடந்து கொள்ள மாட்டார். எனவே நீங்கள் அச்சமின்றி பள்ளி செல்லுங்கள்.

படிப்பதில் எவ்வளவு ஆனந்தம் இருக்கிறது என்று தெரிந்தால் நீங்கள் பள்ளி செல்வதை வெறுக்க மாட்டீர்கள்.படிப்பதால் அறிவு வளர்ச்சி அடைகிறது, மனதில் மகிழ்ச்சி பெருகுகிறது. வாழ்க்கைச் சூழலை அறிந்து கொண்டு எதிர்கொள்ளும் பக்குவத்தை வளர்க்கிறது. புதிய நண்பர்கள் கிடைக்கிறார்கள். விளையாட்டுகளையும், விஞ்ஞானத்தையும் அறிந்து கொள்கிறோம். சவால்களை சந்திக்கும் சாதுரியத்தை கல்வியாற்றல் பெருக்குகிறது. கல்வி சாதாரண நிலையில் இருப்பவர்களை வாழ்வில் உச்சம் தொட வைக்கிறது. இப்படி வாழ்க்கையில் மாற்றம் தரும் கல்வியைப் பெற்றுக்கொள்வதற்காக தவறாமல் பள்ளி செல்வோம், வாழ்வில் உயர்வோம்!

பெற்றோர் கவனத்துக்கு...

குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல மறுத்து அடம்பிடிக்க பல காரணங்கள் இருக்கலாம். பெரும்பாலும் பயமே அதற்கு அடிப்படையாக இருப்பதால், நிஜமான பயத்திற்கு என்ன காரணம் என்பதை அறிந்து அதை அகற்றப் பாருங்கள்...

வயிறு வலிக்கிறது, பல் வலிக்கிறது என்று குழந்தைகள் ஏதாவது காரணம் கூறி பள்ளி செல்வதை தவிர்க்கவும், தாமதப்படுத்தவும் செய்கிறார்கள் என்றால் அதற்கு வளர்ப்பு முறை அல்லது பள்ளிச்சூழலில் ஏற்படும் விருப்பமற்ற நிகழ்வுகள் காரணமாக இருக்கலாம். புதிய நண்பர்கள், ஆசிரியர்களின் அணுகுமுறைகூட அவர்களின் அச்சத்திற்கு காரணமாக இருக்கலாம்.

‘நீ சேட்டை செய்தால் பள்ளியில் டீச்சர் திட்டுவார்கள், அடிப்பார்கள்’ என்று நாம் பயமுறுத்தி வளர்ப்பது அவர்கள் பள்ளியை வெறுக்க காரணமாக இருக்கலாம். இப்படி தவறான வழிகாட்டலை பெற்றோர் கைவிட வேண்டும்.

குழந்தைகள் பள்ளி கிளம்பும் சமயத்தில் பல் துலக்குவது, குளிப்பது, சாப்பிடுவது என எல்லா செயல்களையும் அவர்களே சொந்தமாக செய்யப் பழக்கப்படுத்துவது அவசியமாகும். நேரமாகிறது, அவசரம் என்று நீங்களே குளிப்பாட்டிவிடுவது, உணவு ஊட்டிவிடுவது என வழக்கப்படுத்துவது குழந்தைகளை சோம்பேறியாக்கிவிடும். அவை தாங்கள் செய்ய வேண்டிய கடமை என்பதை அவர்கள் மறந்து செயல்பட ஆரம்பிப்பார்கள். அதேபோல பொது இடங்களில் பேண வேண்டிய சுத்தம், சுகாதாரம் பற்றியும் சொல்லிக் கொடுக்க வேண்டும்.

இரவில் சீக்கிரம் தூங்க வைக்க வேண்டும். அதற்கு நேரத்திற்கு வீட்டுப்பாடம் முடித்து, இரவு உணவு கொடுத்து பழக்கப்படுத்த வேண்டும். ஒவ்வொரு செயலும் தாமதமானால், தூங்குவதும் எழுவதும் தாமதமாகும், பின்னர் கிளம்புவதிலும் பிரச்சினைகள் ஏற்பட்டு புலம்ப வைத்துவிடும்.

புதிதாக பள்ளி செல்கிறார்களா?

இப்போதெல்லாம் 2½ வயது முதலே குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பத் தொடங்கிவிடுகிறோம். சின்னஞ்சிறு வயதில் பள்ளி செல்ல தொடங்கும் குழந்தைகள், பெற்றோரை பிரிய மனமின்றி அதிகம் அழுவார்கள். அவர்களின் அச்சம்போக்கும் வகையில் பேச வேண்டும். வகுப்பு ஆசிரியர் மற்றும் சக மாணவ-மாணவிகளுடன் சகஜமாக பழகும் சூழலை உருவாக்க வேண்டும்.

குழந்தைகளை மற்றவர்களுடன் சேரவிடாமல் அறைக்குள்ளேயே பொத்திப் பொத்தி வளர்ப்பது இதுபோன்ற சிக்கல்களை உருவாக்கலாம். பூச்சாண்டி வருகிறான் பாரு, சேட்டை செய்தால் டீச்சரை அடிக்கச் சொல்வேன் என்பதுபோன்ற மிரட்டல்களுடன் குழந்தைகளை வளர்க்கக்கூடாது.

பள்ளியில் அப்படி இருக்க வேண்டும், இப்படி இருக்க வேண்டும், ஆசிரியர் சொல்வதுபோல நடக்காவிட்டால் அடிப்பார் என்றெல்லாம் பயமுறுத்தக் கூடாது. 

Next Story