அரசு விடுதிகளில் சேர மாணவ மாணவிகள் விண்ணப்பிக்கலாம் கலெக்டர் ஷில்பா தகவல்


அரசு விடுதிகளில் சேர மாணவ மாணவிகள் விண்ணப்பிக்கலாம் கலெக்டர் ஷில்பா தகவல்
x
தினத்தந்தி 14 Jun 2018 8:30 PM GMT (Updated: 14 Jun 2018 1:15 PM GMT)

நெல்லை மாவட்டத்தில் உள்ள அரசு விடுதிகளில் சேர மாணவ– மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என்று நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா தெரிவித்து உள்ளார்.

நெல்லை, 

நெல்லை மாவட்டத்தில் உள்ள அரசு விடுதிகளில் சேர மாணவ– மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என்று நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:–

52 விடுதிகள்

நெல்லை மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினர் வகுப்பை சேர்ந்த பள்ளிக்கூடம், கல்லூரி, பாலிடெக்னிக், ஐ.டி.ஐ. படிக்கும் மாணவ–மாணவிகள் அரசு விடுதிகளில் தங்கி படிக்க சேர்க்கை நடைபெற்று வருகிறது. நெல்லை மாவட்டத்தில் 52 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் பள்ளிக்கூட மாணவர்களுக்கு 31 விடுதிகள், மாணவிகளுக்கு 14 விடுதிகள், கல்லூரி, பாலிடெக்னிக், ஐ.டி.ஐ. மாணவர்களுக்கு 3 விடுதிகள், மாணவிகளுக்கு 4 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன.

பள்ளிக்கூட விடுதிகளில் 4–ம் வகுப்பு முதல் பிளஸ்–2 வகுப்பு வரை படிக்கின்ற மாணவ– மாணவிகளும், பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு மற்றும் பாலிடெக்னிக், ஐ.டி.ஐ. படிக்கும் மாணவ–மாணவிகளும் இந்த விடுதிகளில் சேரலாம். அனைத்து விடுதிகளிலும், அனைத்து வகுப்பை சேர்ந்த மாணவ–மாணவிகளும் குறிப்பிட்ட விகிதாசார அடிப்படையில் சேர்த்து கொள்ளப்படுகின்றனர்.

சலுகைகள்

அனைத்து விடுதிகளிலும் மாணவ–மாணவிகளுக்கு எந்தவித செலவும் இல்லாமல் சலுகைகள் இலவசமாக வழங்கப்படுகின்றன. அதாவது உணவும், தங்கும் வசதியும் அளிக்கப்படும்.

10–ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு சீருடைகள் வழங்கப்படும். 10–ம் வகுப்பு மற்றும் பிளஸ்–2 படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு சிறப்பு வழிகாட்டி புத்தகங்கள் வழங்கப்படும். மலைப் பகுதியில் உள்ள விடுதிகளில் மாணவ–மாணவிகளுக்கு கம்பளி மேலாடைகள் வழங்கப்படும்.

தகுதிகள்

இந்த விடுதிகளில் சேரும் மாணவ–மாணவிகளின் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். இருப்பிடத்தில் இருந்து, படிக்கும் கல்வி நிலையத்தின் தூரம் குறைந்தபட்சம் 8 கிலோ மீட்டருக்கு மேல் இருக்க வேண்டும். இந்த தொலைவு மாணவிகளுக்கு மட்டும் பொருந்தாது.

தகுதி உடைய மாணவர்கள் விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளரிடம் இருந்து அல்லது மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் இலவசமாக பெற்று கொள்ளலாம்.

கடைசி தேதி

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பள்ளிக்கூட விடுதிகளுக்கு விடுதி காப்பாளர் அல்லது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் வருகிற 20–ந்தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். கல்லூரி விடுதிகளுக்கு அடுத்த மாதம் (ஜூலை) 15–ந்தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும்போது சாதி மற்றும் பெற்றோரின் ஆண்டு வருமானம் குறித்த சான்றிதழ்கள் அளிக்க தேவையில்லை. விடுதியில் சேரும்போது இந்த சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு விடுதியிலும் முகாமில் வசிக்கும் இலங்கை தமிழர்களின் குழந்தைகளுக்கு 5 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளன.

எனவே மாணவ–மாணவிகள் இந்த சலுகைகளை பெற்று பயன் அடையலாம்.

இவ்வாறு நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா தெரிவித்து உள்ளார்.


Next Story