கருகி வரும் வாழைப்பயிர்களை காப்பாற்ற அணைகளில் தண்ணீர் திறக்க வேண்டும் சி.த.செல்லப்பாண்டியன் கலெக்டரிடம் வலியுறுத்தல்


கருகி வரும் வாழைப்பயிர்களை காப்பாற்ற அணைகளில் தண்ணீர் திறக்க வேண்டும் சி.த.செல்லப்பாண்டியன் கலெக்டரிடம் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 14 Jun 2018 8:45 PM GMT (Updated: 14 Jun 2018 2:26 PM GMT)

தூத்துக்குடி மாவட்டத்தில் கருகி வரும் வாழைப்பயிர்களை காப்பாற்ற அணைகளில் தண்ணீர் திறக்க வேண்டும் என்று மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் சி.த.செல்லப்பாண்டியன் கலெக்டரிடம் வலியுறுத்தி உள்ளார்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்டத்தில் கருகி வரும் வாழைப்பயிர்களை காப்பாற்ற அணைகளில் தண்ணீர் திறக்க வேண்டும் என்று மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் சி.த.செல்லப்பாண்டியன் கலெக்டரிடம் வலியுறுத்தி உள்ளார்.

இது குறித்து அவர் மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரியை சந்தித்து ஒரு கோரிக்கை மனு கொடுத்தார். அதில் கூறி இருப்பதாவது:–

கருகிவரும் வாழைப்பயிர் 

தாமிரபரணி பாசனத்தின் மூலம் தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 46 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெற்று வருகிறது. தற்போது தென்மேற்கு பருவமழை பெய்து வருவதால் பாபநாசம் மற்றும் மணிமுத்தாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

ஆகையால் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர், சாத்தான்குளம், தூத்துக்குடி தாலுகாக்களில் வாழைப்பயிர்கள் கருகி வருகின்றன. இதனால் வாழைப்பயிர்களை காப்பாற்றவும், மக்களின் குடிநீர் தேவைக்காகவும், அனைத்து குளங்களுக்கும் பாபநாசம் மற்றும் மணிமுத்தாறு அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும்.

பழுதடைந்த மின்மாற்றி 

தூத்துக்குடி மாநகராட்சி 4–வது குடிநீர் குழாய் திட்டத்துக்கான கலியாவூர் நீரேற்று நிலையத்தில் உள்ள மின்மாற்றி மின்னல் தாக்கி பழுதடைந்து உள்ளது. உடனடியாக அந்த மின்மாற்றியை சீரமைத்து, தூத்துக்குடி மாநகர மக்களின் குடிநீர் பிரச்சினையை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Next Story