பிளாஸ்டிக் கழிவுகள் சிமெண்டு தொழிற்சாலைக்கு அனுப்பும் பணி தொடக்கம்


பிளாஸ்டிக் கழிவுகள் சிமெண்டு தொழிற்சாலைக்கு அனுப்பும் பணி தொடக்கம்
x
தினத்தந்தி 14 Jun 2018 10:45 PM GMT (Updated: 14 Jun 2018 7:18 PM GMT)

தாம்பரம் நகராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் உபயோகம் இல்லாத பிளாஸ்டிக் கழிவுகளை அரியலூரில் உள்ள சிமெண்டு தொழிற்சாலைக்கு அனுப்பும் பணிகள் தொடங்கி உள்ளது.

தாம்பரம்,

சென்னையை அடுத்த தாம்பரம் நகராட்சி பகுதிகளில் உள்ள வீடுகளில் இருந்து நகராட்சி நிர்வாக கமிஷனர் கோ.பிரகாஷ் உத்தரவின்படி மக்கும் மற்றும் மக்காத குப்பைகள் என்று தரம் பிரித்து வாங்கும் பணி நடைபெற்று வருகிறது. வாரம் தோறும் புதன் கிழமைகளில் பிளாஸ்டிக் குப்பைகள் சேகரிக்கப்படுகிறது.

மக்கும் குப்பைகளில் இருந்து உரம் மற்றும் உயிரி எரிவாயு தயாரிக்கும் பணியை பல்வேறு முறைகளில் செயல்படுத்த நகராட்சி தொடங்கி உள்ளது. அதன்படி நுண்உர செயலாக்க மையம், சிறிய வகை நுண் உர செயலாக்க மையங்கள் அமைக்கும் பணிகள் 20 இடங்களில் நடைபெற்று வருகின்றன.

விரைவில் தாம்பரம் நகராட்சி பகுதிகளில் சேகரிக்கப்படும் மக்கும் குப்பைகள் அனைத்தும் உரமாகவோ அல்லது உயிரி எரிவாயுவாகவோ மாற்றப்படும்.

மேலும் மக்காத குப்பைகளில் இருந்து பிரித்தெடுக்கப்படும் பிளாஸ்டிக் கழிவுகள் புதன்கிழமைதோறும் நகராட்சி துப்புரவு பணியாளர்கள் மூலம் வாங்கப்படுகிறது.

உபயோகப்படுத்த முடியாத இந்த பிளாஸ்டிக் கழிவுகளை, நகராட்சி மண்டல இயக்குனர் இளங்கோவன் உத்தரவின்படி, அரியலூரில் உள்ள சிமெண்டு தொழிற்சாலைக்கு எரிபொருள் பயன்பாட்டுக்கு அனுப்ப புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது.

அதன்பேரில் தாம்பரம் நகராட்சி பகுதிகளில் சேகரிக்கப்படும் மக்காத குப்பைகளில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட இந்த உபயோகப்படுத்த முடியாத பிளாஸ்டிக் கழிவுகளை அரியலூரில் உள்ள சிமெண்டு தொழிற்சாலைக்கு அனுப்பி வைக்கும் பணி நேற்று தொடங்கியது. நகராட்சி கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலையில் முதல் முறையாக 2 டன் அளவிலான பிளாஸ்டிக் கழிவுகள் லாரி மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.

தொடர்ந்து இதுபோன்று நகராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் மக்காத குப்பைகளில் இருந்து உபயோகம் இல்லாத பிளாஸ்டிக் கழிவுகள் பிரித்தெடுக்கப்பட்டு சிமெண்டு தொழிற்சாலைக்கு அனுப்பி வைக்கப்படும் என்று நகராட்சி கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.

அப்போது நகராட்சி சுகாதார அலுவலர் அறிவுச்செல்வம், ஆய்வாளர்கள் ஆல்பர்ட் அருள்ராஜ், சிவக்குமார், காளிதாஸ் உள்பட நகராட்சி சுகாதார துறையினர் உடன் இருந்தனர்.

Next Story