உஷாரய்யா உஷாரு..


உஷாரய்யா உஷாரு..
x
தினத்தந்தி 17 Jun 2018 6:50 AM GMT (Updated: 17 Jun 2018 6:50 AM GMT)

அந்த இளைஞனும், இளம் பெண்ணும் சம வயதுடையவர்கள். இருவருக்கும் வயது 27. கல்லூரியில் ஒன்றாக படித்தவர்கள். அப்போது அவர்களுக்குள் நட்புரீதியான அறிமுகம் மட்டுமே இருந்தது.

ந்த இளைஞனும், இளம் பெண்ணும் சம வயதுடையவர்கள். இருவருக்கும் வயது 27. கல்லூரியில் ஒன்றாக படித்தவர்கள். அப்போது அவர்களுக்குள் நட்புரீதியான அறிமுகம் மட்டுமே இருந்தது. படிப்பு முடிந்ததும் இருவரும் வெவ்வேறு சாப்ட்வேர் நிறுவனங்களில் வேலைக்கு சேர்ந்தார்கள். பின்பு ஒருமுறை அவர்கள் இருவரும் எதேச்சையாக சந்திக்க, அது நெருக்கமான நட்புக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்துவிட்டது. அதுவே காதலாகவும் கனிந்துவிட்டது.

வேலை பார்த்த நகரத்தில் சுதந்திர பறவையாக அவர்கள் சுற்றிக்கொண்டிருந்த நேரத்தில், பெற்றோர் அவளுக்கு மாப்பிள்ளை தேடினார்கள். அவள் அழகான ேதாற்றம் கொண்டவள். படித்திருக்கவும் செய்திருக்கிறாள் என்பதால், அந்த பகுதியில் செல்வாக்கும் செல்வமும் மிகுந்த குடும்பம் ஒன்றில் இருந்து அவளை பெண் கேட்டார்கள். தாங்கள் கனவில்கூட நினைத்துப்பார்க்காத அளவுக்கு வசதிபடைத்த சம்பந்தம் என்பதால், அவளது பெற்றோர் உடனே சம்மதம் சொல்லிவிட்டார்கள்.

அவளிடம் அந்த தகவலை சொன்னதும், ‘அவ்வளவு வசதிபடைத்த இடம் நமக்கு சரிப்படாது’ என்று மறுப்பு தெரிவித்தாள். அவள், காதலனையே மணக்கவேண்டும் என்று விரும்பியதுதான் மறுப்பு சொன்னதற்கான காரணம். ஆனால் அவளது பெற்றோரோ, ‘நீ முதலில் வேலையை ராஜினாமா செய்துவிட்டு ஊருக்கு வா.. இங்கு வந்து எல்லாவற்றையும் பேசிக்கொள்ளலாம்’ என்றார்கள். அவளுக்கும் வேலை பிடிக்காமல்தான் இருந்தது. ஊருக்கு போய் அம்மாவிடம் நைசாகப் பேசி காதல் திரு மணத்திற்கு அனுமதி வாங்கிவிடலாம் என்று நினைத்துக்கொண்டு ஊர்வந்து சேர்ந்தாள்.

தனது காதலை பற்றி அம்மாவிடம் சொல்லி, அம்மாவின் மனதை மாற்ற அவள் முயற்சிக்க- அம்மாவோ, காதலனை மறந்துவிட்டு வசதிபடைத்த குடும்பத்து இளைஞனை திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தினார்.

தாய்க்கும்- மகளுக்கும் இடையே இந்த போராட்டம் நீடித்துக்கொண்டிருக்க ஒருகட்டத்தில், தனக்கு பேசிமுடித்திருக்கும் வரனின் செல்வச் செழிப்பை அவள் காண நேர்ந்தது. அது அவளுக்குள் சலனத்தை ஏற்படுத்தி மனமாற்றத்தை உருவாக்கியது. அதை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட தாயார், மகளை திரு மணத்திற்கு சம்மதிக்கவைத்துவிட்டார். அந்த வேகத்திலே மாப்பிள்ளை வீட்டார் ஜரூராக கல்யாண ஏற்பாடுகளை செய்யத் தொடங்கினார்கள். அவளும் காதலனை பிரியும் நோக்கத்தில் அவனது செல்போன் அழைப்புகளை மெல்ல மெல்ல தவிர்த்துக்கொண்டிருந்தாள்.

அன்று மாப்பிள்ளை வீட்டார் அவளை அழைத்துக்கொண்டு திருமண புடவை, நகைகள் போன்றவை களை தேர்வு செய்ய கடைகளுக்கு சென்றார்கள். அவைகளை வாங்கிவிட்டு அவர்கள் மணப்பெண் மற்றும் மணமகன் அலங்காரம் பற்றி பேசுவதற்காக பிரபலமான அழகுநிலையம் ஒன்றிற்குள் நுழைந்தார்கள். அங்கு வருங்கால மாப்பிள்ளையும்- அவளும் அழகு ஆலோசனை பெற்றுக்கொண்டிருந்தபோது, காதலன் எப் படியோ துப்பறிந்து அவளைத் தேடி அங்கே வந்துவிட்டான். மாப்பிள்ளையின் தம்பி என்று கூறிக்கொண்டு அழகு நிலையத்திற்குள் நுழைந்துவிட்டான்.

காதலனை பார்த்ததும் அவள் அதிர்ந்துபோனாள். அவன், அவளது கையை பிடித்துக்கொண்டு தன்னோடு வந்துவிடும்படி கூறினான். நிச்சயம் செய்தவனுக்கு ஆத்திரம் வந்தது. தட்டிக்கேட்டான். இருவருக்கும் இடையே கடுமையான சண்டை ஏற்பட்டது. அழகு நிலையத்திற்குள் இருந்த பணியாளர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் தடுமாற, அதற்குள் காதலன் கடுமையாக தாக்கப்பட்டு படுகாயமடைந்தான். அவனை மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்தனர்.

போலீஸ் நிலையம், மருத்துவமனை என்று சம்பந்தப்பட்ட அனைவரும் அலைந்துகொண்டிருக்கிறார்கள். அவளது பழைய காதல் கதையை அறிந்த வரன் குடும்பம் கவுரவம் கருதி, திருமண நிச்சயத்தில் இருந்து பின்வாங்கிவிட்டது. அடிவாங்கி மருத்துவமனையில் இருக்கும் காதலனுக்கு தேவையான பணத்தை கொடுத்து பிரச்சினை வீதிக்கு வராமல் பார்த்துக்கொள்ளும் வேலையிலும் அவர்கள் இறங்கி யிருக்கிறார்கள்.

படுகாயம் அடைந்த காதலன் மீது அவளுக்கு அனுதாபம் உருவாகியது. அவனை பார்க்க அவள் மருத்துவமனைக்கு சென்றபோது அங்கும் கலாட்டா! ‘உன்னால்தானே என் மகனுக்கு இந்த கதி’ என்று அவனது அம்மா அடிக்காத குறையாக அவளை துரத்திவிட்டிருக்கிறார்!

எப்படி எல்லாம் நடக்குது பார்த்தீர்களா?

- உஷாரு வரும்.

Next Story