போதிய வருமானம் இன்றி வாழ வழியில்லாததால் நகை தொழிலாளி விஷம் குடித்து சாவு


போதிய வருமானம் இன்றி வாழ வழியில்லாததால் நகை தொழிலாளி விஷம் குடித்து சாவு
x
தினத்தந்தி 18 Jun 2018 11:30 PM GMT (Updated: 18 Jun 2018 7:23 PM GMT)

முத்துப்பேட்டையில், போதிய வருமானம் இன்றி வாழ வழியில்லாததால் நகை தொழிலாளி விஷம் குடித்து இறந்தார். அதிர்ச்சியில் அவரது மனைவியும், மகளும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

முத்துப்பேட்டை,

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் உள்ள திருத்துறைப்பூண்டி சாலையில் வசித்து வந்தவர் குணசேகரன்(வயது 50). நகை செய்யும் தொழிலாளி. இவருடைய மனைவி அமுதா(42), மகள் வித்யா(22). மகன்கள் விஜய்(16), ஹரிகரன்(14). வித்யாவுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. விஜய் கோவையில் வேலை பார்த்து வருகிறார். ஹரிகரன், முத்துப்பேட்டையில் உள்ள ஒரு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறான்.

குணசேகரன் உடல் நிலை பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்தார். மேலும், குடும்பம் நடத்த போதுமான வருமானம் இன்றி கஷ்டப்பட்டு வந்ததாகவும் தெரிகிறது.

ஒரு பக்கம் உடல்நிலை பாதிப்பு, மறுபக்கம் போதிய வருமானம் இல்லாத நிலையில் தான் உயிர் வாழ வேண்டுமா? என்று எண்ணிய குணசேகரன் நேற்று முன்தினம் இரவு வீட்டில் அனைவரும் தூங்கிய பின்னர் விஷத்தை குடித்து படுத்து விட்டார். நேற்று அதிகாலையில் வழக்கம்போல் அமுதா எழுந்தார். கணவரை எழுப்புவதற்காக அருகில் சென்று பார்த்தபோது அவர் இறந்து கிடந்தது தெரிய வந்தது.

கணவரின் உயிரற்ற உடலை கண்டு அதிர்ச்சி அடைந்த அமுதா கதறி அழுதார். அவரது அழுகுரல் கேட்டு அங்கு தூங்கிக்கொண்டு இருந்த அவர்களது மகள் வித்யா எழுந்துள்ளார். கணவர் இறந்து விட்டதால் இனிமேல் என்ன செய்வது என மனமுடைந்த அமுதா, மகளுடன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து தனது விருப்பத்தை மகளிடம் தெரிவித்துள்ளார். அதற்கு வித்யாவும் சம்மதம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து தாய்-மகள் இருவரும் வீட்டுக்குள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

வீட்டில் நடந்த சம்பவம் எதுவும் தெரியாமல் தூங்கிக் கொண்டிருந்த ஹரிகரன், கண் விழித்து எழுந்து பார்த்த போது வீட்டுக்குள் தந்தை, தாய், அக்காள் ஆகிய 3 பேரும் பிணமாக கிடப்பதை கண்டு பார்த்து கதறி அழுதார். அவரது சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் அங்கு ஓடி வந்து பார்த்தனர். அப்போதுதான் நடந்த சம்பவம் அனைவருக்கும் தெரிய வந்தது.

இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் முத்துப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு இனிகோதிவ்யன், இன்ஸ்பெக்டர் ராஜேஷ், சப்-இன்ஸ்பெக்டர் கணபதி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து தற்கொலை செய்து கொண்ட 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து முத்துப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் முத்துப்பேட்டை பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story