தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இதுவரை 200 டன் கந்தக அமிலம் அகற்றம் கோவை–சேலம் தொழிற்சாலைகளுக்கு கொண்டு செல்லப்பட்டன


தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இதுவரை 200 டன் கந்தக அமிலம் அகற்றம் கோவை–சேலம் தொழிற்சாலைகளுக்கு கொண்டு செல்லப்பட்டன
x
தினத்தந்தி 19 Jun 2018 10:00 PM GMT (Updated: 19 Jun 2018 6:29 PM GMT)

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இதுவரை 200 டன் கந்தக அமிலம் அகற்றப்பட்டு உள்ளன.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இதுவரை 200 டன் கந்தக அமிலம் அகற்றப்பட்டு உள்ளன. அந்த அமிலங்கள் கோவை, சேலத்தில் உள்ள தொழிற்சாலைகளுக்கு டேங்கர் லாரிகளில் கொண்டு செல்லப்பட்டன.

அதிகாரிகள் ஆய்வு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த மே மாதம் 22–ந் தேதி நடந்த பேரணியின் போது போலீசார் துப்பாக்கி சூடு மற்றும் தடியடி நடத்தினார்கள். இதில் 13 பேர் பலியானார்கள். 100–க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழக அரசு கடந்த 28–ந் தேதி ஸ்டெர்லைட் ஆலையை மூடி ‘சீல்‘ வைத்தது.

ஸ்டெர்லைட் ஆலையில் ரசாயன கசிவு ஏற்படுவதாக மாவட்ட நிர்வாகத்துக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி உத்தரவின் பேரில், உதவி கலெக்டர் பிரசாந்த் தலைமையிலான குழுவினர் ஆலையில் ஆய்வு செய்தனர். அந்த ஆய்வில் ஸ்டெர்லைட் ஆலையில் சேமித்து வைக்கப்பட்டு இருந்த கன்டெய்னரில் சிறிய கசிவு ஏற்பட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக உதவி கலெக்டர் தலைமையிலான குழுவினர் மாவட்ட கலெக்டரிடம் அறிக்கை தாக்கல் செய்தனர்.

கந்தக அமிலம் அகற்றும் பணி

கலெக்டர் சந்தீப் நந்தூரி ஆலையில் இருக்கும் 1000 டன் கந்தக அமிலத்தை டேங்கர் லாரிகள் மூலம் அப்புறப்படுத்த உத்தரவிட்டார். அதன்படி கந்தக அமிலத்தை ஆலையில் இருந்து வெளியேற்றும் பணி நேற்று முன்தினம் காலையில் தொடங்கியது.

ஆலையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருந்ததால் ஜெனரேட்டர் மூலம் மின்வசதி செய்யப்பட்டது. மோட்டார் மூலம் பம்பிங் செய்யப்பட்டு, டேங்கர் லாரிகளில் கந்தக அமிலம் நிரப்பப்பட்டது. நேற்று முன்தினம் இரவில் 5 டேங்கர் லாரிகளில் கந்தக அமிலம் நிரப்பி வெளியே கொண்டு வரப்பட்டது.

2–வது நாளாக...

அந்த பகுதியில் உள்ள எடை மேடையில் டேங்கர் லாரிகளில் எவ்வளவு அளவு கந்தக அமிலம் ஏற்றப்பட்டு உள்ளது என்று எடை பார்க்கப்பட்டது. ஒரு லாரிக்கு சராசரியாக 25 டன் கந்தக அமிலம் ஏற்றலாம். ஆனால் வெளியே வந்த லாரிகளில் 10 டன் அமிலம் மட்டுமே நிரப்பப்பட்டு இருந்தது. இதனால் அந்த லாரிகள் மீண்டும் ஆலைக்கு திருப்பி கொண்டு செல்லப்பட்டது.

பின்னர் டேங்கர் லாரிகளில் முழுவதும் கந்தக அமிலம் நிரப்பப்பட்டு, வெளியூர்களில் உள்ள தொழிற்சாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்த பணி விடிய விடிய நடைபெற்றது. இந்த நிலையில் நேற்று 2–வது நாளாக ஆலையில் இருந்து கந்தக அமிலம் அகற்றும் பணி நடந்தது. இந்த பணி உதவி கலெக்டர் பிரசாந்த் தலைமையிலான அதிகாரிகள் குழு முன்னிலையில் நடத்தப்பட்டது.

கலெக்டர் பேட்டி

இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரியிடம் கேட்ட போது, அவர் கூறுகையில், “தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் கந்தக அமிலத்தை அகற்றும் பணி நடந்து வருகிறது. இதுவரை 7 டேங்கர் லாரிகள் மூலம் 200 டன் கந்தக அமிலம் வெளியேற்றப்பட்டுள்ளது. இந்த அமிலம் கோவை, சேலம், தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் உள்ள தனியார் தொழிற்சாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. (அதாவது கந்தக அமிலத்தை மூலப்பொருளாக பயன்படுத்தும் தொழிற்சாலைகளுக்கு அனுப்பப்பட்டு உள்ளது). கந்தக அமிலத்தை அகற்றும் பணி பாதுகாப்பான முறையில் நடந்து வருகிறது. அமிலத்தை அகற்றுவதில் இதுவரை எந்த பிரச்சினையும் இல்லை. இன்னும் இரண்டு நாட்களில் ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து முற்றிலும் கந்தக அமிலம் அகற்றப்படும்“ என்றார்.


Next Story