மின்சாரம் தாக்கி பட்டதாரி வாலிபர் சாவு; காப்பாற்ற முயன்றவர் படுகாயம்


மின்சாரம் தாக்கி பட்டதாரி வாலிபர் சாவு; காப்பாற்ற முயன்றவர் படுகாயம்
x
தினத்தந்தி 19 Jun 2018 10:30 PM GMT (Updated: 19 Jun 2018 6:32 PM GMT)

கொரடாச்சேரி அருகே தாயுடன் சண்டையிட்டு சென்ற பட்டதாரி வாலிபர், மின்சாரம் தாக்கி இறந்தார். அவரை காப்பாற்ற முயன்றவர் படுகாயமடைந்தார்.

கூத்தாநல்லூர்,

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே உள்ள அத்திச்சோழமங்கலம் தெற்கு தெருவை சேர்ந்தவர் குமார். இவருடைய மகன் குமரேசன்(வயது23). இவர் எம்.காம். வரை படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார். குமரேசனிடம் ஏன் வேலைக்கு செல்லவில்லை என அவரது தாய் பரமேஸ்வரி கண்டித்தார். இதனால் குமரேசன் தனது தாயிடம் சண்டையிட்டு கோபித்துக்கு கொண்டு தனது வீட்டில் இருந்து வெளியே சென்றார். பின்னர் அவர் இரவு வீட்டுக்கு திரும்பி வராமல் அருகே உள்ள சமுதாய கூடத்துக்கு சென்றார். சமுதாய கூடத்தின் மேல் ஏறி படுக்க முயன்ற அவர் அந்த கூடத்தில் உள்ள ஜன்னலை பிடித்து மேலே ஏறினார். அப்போது அவர் எதிர்பாராதவிதமாக மேலே உள்ள மின்கம்பியை பிடித்தார். இதனால் குமரேசனை மின்சாரம் தாக்கியது. இதனால் அவர் அலறி துடித்தார்.

இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த வழியாக சென்ற மாதவன் என்பவர் மின்சாரம் தாக்கி அலறிய குமரேசனை காப்பாற்ற முயன்றார். அப்போது அவரையும் மின்சாரம் தாக்கியது. உடனே அப்பகுதி மக்கள் விரைந்து சென்று குமரேசன், மாதவன் ஆகிய இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே குமரேசன் பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த மாதவன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து கொரடாச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story