பாதி மொட்டை, பாதி மீசையுடன் ஆஜரான மூவேந்தர் முன்னேற்ற கழக நிர்வாகி


பாதி மொட்டை, பாதி மீசையுடன் ஆஜரான மூவேந்தர் முன்னேற்ற கழக நிர்வாகி
x
தினத்தந்தி 19 Jun 2018 11:45 PM GMT (Updated: 19 Jun 2018 6:58 PM GMT)

தஞ்சை கோர்ட்டில் பாதி மொட்டை, பாதி மீசையுடன் மூவேந்தர் முன்னேற்ற கழக நிர்வாகி ஆஜரானார். தன் மீது பொய் வழக்கு போட்ட போலீஸ் அதிகாரிகளை கண்டித்து இவ்வாறு வந்ததாக அவர் தெரிவித்தார்.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தாலுகா சமையன்குடிகாடு கிராமம் தெற்குத் தெருவை சேர்ந்தவர் கணேசன். இவருடைய மகன் விக்னேஷ்(வயது 22). அதே ஊரைச் சேர்ந்த அருண்குமார், சக்திவேல் ஆகியோர் கடந்த 2015-ம் ஆண்டு மார்ச் மாதம் 7-ந் தேதி மாலை நேரத்தில் ஒரத்தநாடு போலீஸ் நிலையம் அருகே நடந்து சென்றனர்.

அப்போது அவர்களை ஒக்காடு மேலையூரை சேர்ந்த 3 பேர் வழிமறித்து தகாத வார்த்தைகளாலும், சாதியை சொல்லியும் திட்டி தாக்கினர். இதில் காயம் அடைந்த இருவரும் ஒரத்தநாடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

இவர்களை பார்ப்பதற்காக விக்னேஷ், தனது நண்பர் வெங்கடேசுடன் சென்று கொண்டிருந்தார். ஒரத்தநாடு சார்பதிவாளர் அலுவலகம் அருகே பிள்ளையார் கோவில் தெருவில் சென்றபோது விக்னேசையும், அவருடைய நண்பரையும் 10 பேர் வழிமறித்தனர்.

அவர்கள் அனைவரும், எங்கள் மீது புகார் கூறியவரை பார்ப்பதற்காக எப்படி செல்லலாம்? என கேள்வி எழுப்பியதுடன், சாதி பெயரை சொல்லி திட்டியுள்ளனர். மேலும் மோட்டார் சைக்கிளில் 2 பேரையும் சிறிது தூரம் கடத்தி சென்று தாக்கியதுடன் இரும்பு கம்பியால் தாக்கியும், அரிவாளாலும் வெட்டியுள்ளனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த இருவரும் அந்த கும்பலிடம் இருந்து தப்பி ஓடி வந்தனர். 10 பேர் கொண்ட கும்பல் தாக்கியதில் அவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது. இது குறித்து ஒரத்தநாடு போலீஸ் நிலையத்தில் விக்னேஷ் புகார் அளித்தார்.

அதில், எங்கள் உயிருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும், எங்களை தாக்கியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

அதன்படி கொலை மிரட்டல், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் ஒரத்தநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக பாப்பாநாட்டை அடுத்த நெம்மேலி வடக்கு கிராமத்தை சேர்ந்த ராஜமாணிக்கம் மகன் ஜெயக்குமார்(38) உள்பட சிலரை போலீசார் கைது செய்தனர்.

ஜெயக்குமார், தமிழக விவசாயிகள் சங்கங்களின் கூட்டு இயக்க ஒரத்தநாடு ஒன்றிய செயலாளராகவும், மூவேந்தர் முன்னேற்ற கழக ஒரத்தநாடு ஒன்றிய செயலாளராகவும் பொறுப்பு வகித்து வருகிறார்.

இந்த வழக்கு தஞ்சை முதலாவது கூடுதல் அமர்வு கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் ஆஜராகும்படி ஜெயக்குமாருக்கு சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது. அதன்படி நேற்று கோர்ட்டில் ஜெயக்குமார் ஆஜரானார். அப்போது அவர் தனது வலது பக்க மீசையை எடுத்து விட்டும், வலது பக்கம் பாதி மொட்டை போட்ட நிலையில் கோர்ட்டுக்கு வந்து இருந்தார். இதனால் கோர்ட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி பூரண ஜெயஆனந்த் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை நீதிபதி விசாரித்து ஜூலை 25-ந் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

கோர்ட்டில் இருந்து வெளியே வந்த ஜெயக்குமார் நிருபர்களிடம்கூறியதாவது. என் மீது புகார் கொடுத்தவர் யார்? என்றே எனக்கு தெரியாது. அவர் கருப்பா? சிவப்பா? என்று கூட தெரியாது. ஆனால் அவரை சாதியை சொல்லி தாக்கியதாக என்னை போலீசார் கைது செய்தனர். பட்டுக்கோட்டை கிளை சிறையில் 12 நாட்கள் இருந்தேன். பின்னர் ஜாமீனில் வெளியே வந்து 1 மாதம் ஒரத்தநாடு போலீஸ் நிலையத்தில் கையெழுத்து போட்டேன். ஒரு சாதியினருக்கு எதிராக நான் செயல்பட்டது போல் என் மீது போலீஸ் அதிகாரிகள் பொய் வழக்கு போட்டனர்.

இந்த பொய் வழக்கை திரும்ப பெற வேண்டும். பொய் வழக்கு போட்ட போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழக அரசு, கோர்ட்டின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காகத்தான் நான், பாதி மொட்டை அடித்து கொண்டு, பாதி மீசையையும் எடுத்து விட்டு வந்தேன். ஆனால் கோர்ட்டில் இதுகுறித்து யாரும் எதுவும் கேட்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story