பாசப்போராட்டம் நடத்திய மாணவர்கள்: ‘நண்பனாக இருந்து பாடம் நடத்தியதால் அன்பை காட்டினார்கள்’ பள்ளிப்பட்டு ஆசிரியர் பேட்டி


பாசப்போராட்டம் நடத்திய மாணவர்கள்: ‘நண்பனாக இருந்து பாடம் நடத்தியதால் அன்பை காட்டினார்கள்’ பள்ளிப்பட்டு ஆசிரியர் பேட்டி
x
தினத்தந்தி 22 Jun 2018 12:15 AM GMT (Updated: 21 Jun 2018 8:20 PM GMT)

நண்பனாக இருந்து பாடம் நடத்தியதால் அவர்கள் தங்களது அன்பை காட்டியதாக பள்ளிப்பட்டு ஆசிரியர் பகவான் தெரிவித்தார்.

பள்ளிப்பட்டு,

ஆசிரியர்கள் மீது மாணவர்களுக்கு தனி மரியாதை இருந்தது ஒருகாலம். ஆனால் தற்போது ஆசிரியர்-மாணவர் உறவு என்பது ஏதோ கடமைக்காகவே இருக்கிறது. ஆனால் இந்த காலத்திலும் மாணவர்கள் மனதில் இடம்பிடிக்க முடியும் என்பதை நிரூபித்து இருக்கிறார் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த ஆசிரியர் பகவான்.

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே வெளியகரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் இவர் ஆங்கில ஆசிரியராக 5 ஆண்டுகள் பணியாற்றி வந்தார். இவரது அயராத முயற்சியால் இந்த பள்ளி ஆங்கிலத்தில் 100 சதவீத தேர்ச்சி பெற்றது. மாணவர்களிடம் பாடத்தை தாண்டிய அக்கறை காட்டியதால் பகவானை மாணவ, மாணவிகளுக்கு மிகவும் பிடித்து விட்டது.

பாசப்போராட்டம்

இந்த சூழ்நிலையில் பகவான், திருத்தணி அடுத்த அருங்குளத்தில் உள்ள ஒரு பள்ளிக்கு பணிஇடமாறுதல் செய்யப்பட்டார். இதனை அறிந்த மாணவ, மாணவிகள் அவர் வேறுபள்ளிக்கு செல்லக்கூடாது என்று கதறி அழுதனர்.

பள்ளிக்கு வந்து பணிவிடுப்பு கடிதம் வாங்கிய பகவானை, வெளியே செல்ல விடாமல் அவர்கள் அரங்கேற்றிய பாசப்போராட்டம் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது. ஆசிரியரை கட்டி அணைத்தபடி மாணவ-மாணவிகள் கதறி அழுதனர். பகவானும் மாணவர்களை பிரிய மனமில்லாமல் கண்ணீர் வடித்தார். இதனையடுத்து ஆசிரியர் பகவான் இந்த பள்ளியில் 10 நாட்கள் மட்டும் பணி செய்ய அதிகாரி அனுமதி அளித்தார்.

மாணவர்கள் - ஆசிரியர் இடையேயான இந்த பாசப்போராட்ட காட்சிகள் சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாகி உள்ளது.

இதுகுறித்து ஆசிரியர் பகவான் கூறுகையில்:-

நண்பனாக நடத்தினேன்

மாணவர்களின் செயல் ஆச்சரியமாக இருக்கிறது. நான் எனது பணியை தான் செய்தேன். எந்த மாணவர்களையும் திட்டியது இல்லை. ஒரு நண்பனாக இருந்து பாடம் நடத்தினேன். அதற்கு பிரதிபலனாக மாணவர்கள் இப்படி ஒரு அன்பை காட்டுவார்கள் என்று நான் நினைத்து கூட பார்க்கவில்லை. எனக்காக மாணவர்கள் அழுதது எனது வாழ்க்கையில் மறக்க முடியாத நிகழ்வு.

இந்த பள்ளியில் உள்ள மாணவர்கள் அனைவரும் வறுமையில் உள்ளவர்கள். மாணவர்களுக்கு நல்ல ஆசிரியராக பணியாற்றியது மிக்க மகிழ்ச்சி. இவர்களை விட்டுச்செல்ல எனக்கும் விருப்பம் இல்லை. இருப்பினும் அரசு உத்தரவை ஏற்று தான் ஆக வேண்டும்.

எனக்கு நண்பர்களும், தமிழகத்தில் உள்ள சில அதிகாரிகளும் வாழ்த்து தெரிவித்தனர். பொறுப்பும், கடமையும் அதிகரித்துள்ளது. இன்றைய சூழலில் கிராமப்புற மாணவர்களுக்கு ஆங்கிலம் எட்டாக்கனியாக உள்ளது. என்னால் முடிந்த அளவு சிறந்த கல்வியை மாணவர்களுக்கு அளிப்பேன்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story