மகன், மகள்கள் கவனிக்காததால் விஷம் குடித்து வயதான தம்பதி தற்கொலை


மகன், மகள்கள் கவனிக்காததால் விஷம் குடித்து வயதான தம்பதி தற்கொலை
x
தினத்தந்தி 23 Jun 2018 11:45 PM GMT (Updated: 23 Jun 2018 9:05 PM GMT)

வாணாபுரம் அருகே மகன், மகள்கள் கவனிக்காததால் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற வயதான தம்பதி அடுத்தடுத்து உயிரிழந்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வாணாபுரம்,

வாணாபுரம் அருகே சு.நல்லூர் பகுதியை சேர்ந்தவர் ராமன் (வயது 75), தொழிலாளி. இவரது மனைவி இருசம்மாள் (67). இவர்களுக்கு முனியம்மாள் (47), நல்லான்கன்னி (43), சாவித்திரி (40) ஆகிய 3 மகள்களும், பஞ்சமூர்த்தி (45) என்ற மகனும் உள்ளனர்.

இவர்கள் அனைவரும் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். கணவன் மனைவியான ராமன், இருசம்மாள் ஆகியோரை அவர்களது மகள்கள் மற்றும் மகன் கவனிக்காத நிலையில் தனியாக வசித்து வந்தனர்.

இதனால் ராமனும், இருசம்மாளும் மனமுடைந்து காணப்பட்டனர். சம்பவத்தன்று இவர்கள் இருவரும் வீட்டில் இருந்த விஷத்தை (பூச்சிமருந்து) எடுத்து குடித்துவிட்டு மயங்கி கிடந்தனர்.

இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் அவர்கள் சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் வெறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story