பெண்களுக்கான வேலை வாய்ப்பு : வைக்கோலை ஊட்டமேற்றினால் பலன் அதிகம்!


பெண்களுக்கான வேலை வாய்ப்பு  : வைக்கோலை ஊட்டமேற்றினால் பலன் அதிகம்!
x
தினத்தந்தி 24 Jun 2018 11:25 AM GMT (Updated: 24 Jun 2018 11:25 AM GMT)

நல்ல கால்நடை பண்ணையின் உற்பத்தியும், சுகாதாரமும் அங்குள்ள கால்நடைகளுக்கு கொடுக்கப்படும் தீவனத்தை பொறுத்தே இருக்கும்.

நம் நாட்டில் கால்நடைகள், மேய்ச்சல் நிலத்தின் தீவனத்தையும், வைக்கோல் போன்ற பயிர்க்கழிவுகளை நம்பியே வளர்க்கப்படுகின்றன. முந்தைய காலங்களில் மேய்ச்சல் நிலங்கள் செழுமையான சிறந்த பயிர்களை கொண்டிருந்தன. ஆனால் தற்போது மேய்ச்சல் நிலங்கள் பாதிப்புக்கு உள்ளாகி, சக்தி இழந்திருப்பதால் தீவனங்களிலும் போதிய சத்துகள் இருப்பதில்லை. இதனால் கால்நடைகளுக்கு மேய்ச்சல் மூலம் கிடைக்க வேண்டிய தீவனமும், ஊட்டச்சத்துகளும் சரிவர கிடைப்பதில்லை. தமிழகத்தில் 25 சதவீதம் அளவுக்கு பசுந்தீவன பற்றாக்குறை நிலவுகிறது என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த பற்றாக்குறையைபோக்க, வைக்கோல் போன்ற பயிர்க் கழிவுகளை ஊட்டமேற்றி கால்நடைகளுக்கு தீவனமாக கொடுக்கலாம். நமது நாட்டில் நெல் மற்றும் கோதுமை அதிகளவில் பயிர் செய்யப்படுகிறது. இதனால் வைக்கோல் அதிகளவில் கிடைக்கிறது. ஒரு ஹெக்டேர் நிலத்தில் கிடைக்கும் வைக்கோலை ஒரு பசுமாட்டுக்கு ஒரு ஆண்டிற்கு பயன்படுத்தலாம்.

நமக்கு அதிக பாசன வசதியில் நெல், கோதுமை, கேழ்வரகு, மக்காச்சோளம் போன்றவை விளைந்தாலும், அவற்றின் மூலம் பெறப்படும் தீவனங்களில் சத்துக்கள் குறைவாகவே கிடைக்கிறது. ஆகையால் இதை ஊட்டமேற்றி சத்துள்ள பயிர்க்கழிவுகளாக மாற்றி கால்நடைகளுக்கு அளிப்பதன் மூலம் ஆரோக்கியமான முறையில் அதிக லாபம் பெற முடியும். இதுபற்றித்தான் இங்கு விரிவாக பார்க்க போகிறோம்...

வைக்கோல் மற்றும் பிற கழிவுகள்

நெல் அறுவடைக்கு பின்பு வைக்கோல் கிடைக்கிறது. நெல்லை அரிசியாக்கிய பின், அரிசி ஆலை களிலிருந்து உமி, தவிடு, குருணை ஆகியவை உபரி பொருட்களாக கிடைக்கும். இவற்றை கால்நடை களுக்கு உணவாக பயன்படுத்தலாம். வைக்கோலை கூரை வேய் தலுக்கும், காகித ஆலை, காளான் வளர்ப்பு, கோழி வளர்ப்பிலும் பயன் படுத்துவது உண்டு. ஆனாலும் பசு மற்றும் எருமைகளுக்கு உலர் தீவனமாக வைக்கோலை கொடுப்பது என்பது நம்மிடையே பழங்காலம் தொட்டே இருக்கும் வழக்கமாகும்.

வைக்கோலில்உள்ள சத்துக்கள்

வைக்கோலில் கச்சா புரதச்சத்து 2 சதவீத அளவில் இருக்கிறது. இதைத்தவிர கச்சா நார்ச்சத்து, சுண்ணாம்புச் சத்து, மணிச்சத்து, செல்லுலோஸ், லிக்னின் போன்ற சத்துக்களும் இருக்கிறது.

பசுந்தீவனத்தை ஒப்பிட்டுப் பார்க்கும்போது வைக்கோல் சத்துமிக்கதல்ல. நெல் வைக்கோல், கோதுமை வைக்கோலைவிட கேழ்வரகு பயிரில் இருந்து கிடைக்கும் வைக்கோலில் புரதச்சத்து அதிகம் உள்ளது.

வைக்கோலை ஊட்டமேற்றுதல்

பொதுவாக வைக்கோலின் செரிமானத்தன்மை மிகவும் குறைவாகும். இதை சரி செய்ய சோடியம் ஹைட்ராக்சைடு காரத்தினை பயன்படுத்தி செரிமானத்தன்மையை அதிகப்படுத்தலாம். லிக்னி, சிலிக்கா மற்றும் ஹெமிசெல்லுலோஸ் போன்றவைகள் சோடியம் ஹைட்ராக்சைடு மூலம் கரைக்கப்படுகின்றன. இதனால் வைக்கோலின் செரிமானம் அதிகரிக்கிறது.

ஊட்டமேற்றும் தொழில் நுட்பங்கள்

அமோனியேஷன், யூரியா சர்க்கரை ஆலை கழிவு கரைசல், யூரியா ஊட்டமேற்றுதல் என்று 3 வகை வைக்கோல் ஊட்ட மேற்றும் தொழில்நுட்பங்கள் உள்ளன.

அமோனியேஷன் முறையை பொறுத்த வரையில் வைக்கோலை 2 முதல் 3 செ.மீ.நீளதுண்டுகளாக வெட்ட வேண்டும். பின்னர் நிலத்தில் சற்று மேடான பகுதிகளில் வட்டமாக ஒருகுழியை தோண்ட வேண்டும். தொடர்ந்து 35 முதல் 40 சதவீதம் வரை ஈரப்பதம் வருமாறு தண்ணீரை வைக்கோலில் ஊற்றி நனைக்க வேண்டும். பின்னர் குழியின் உள்ளே அதைப் போட்டு 25 முதல் 30 சதவீதம் திரவ அமோனியாவை தெளிக்க வேண்டும். இதையடுத்து அந்த குழியை பிளாஸ்டிக் தாள்களை கொண்டு மூட வேண்டும்.

சுமார் ஒரு மாதம் கழித்து, குழியில் இருந்து எடுக்கப்பட்ட பயிர்கழிவுகளை கால்நடைகளுக்கு தீவனமாக கொடுக்கலாம். இவ்வாறு எடுக்கப்பட்ட தீவனத்தை ஓர் இரவு காற்றோட்டமாக வைத்த பின்னரே கால்நடைகளுக்கு கொடுக்கவேண்டும். ஏனெனில் அதிகளவில் அமோனியா இருப்பின் அது காற்றில் ஆவியாகிவிடும்.

இதேபோல் யூரியா சர்க்கரை ஆலைக்கழிவு கரைசல் முறையை பொறுத்தவரை வைக்கோலை ஊட்டமேற்ற 1¼ கிலோ யூரியா, 2 லிட்டர் தண்ணீர், 10 கிலோ சர்க்கரை ஆலை கழிவு, 1 கிலோ சமையல் உப்பு, தாது உப்புகலவை ஆகியன தேவைப்படுகிறது.

சுமார் 15 கிலோ கொள்ளளவு கொண்ட மண்பானையில் யூரியாவை, தண்ணீரில் நன்கு கரைக்க வேண்டும். அதனுடன் 10 கிலோ சர்க்கரை ஆலை கழிவுகளை சேர்த்து கலக்கவேண்டும். பின்னர் ஒரு கிலோ சமையல் உப்பு, தாது உப்பு கலவையை சேர்த்து மண்பானையை மூடி ஒரு மாதம் அப்படியே வைத்து பாதுகாத்திட வேண்டும்.

இதன் பின்னர் மண்பானையில் வைக்கப்பட்டுள்ள கரைசலில் தினமும் அரை கிலோ எடுத்து 2 லிட்டர் தண்ணீரில் நன்கு கரைக்க வேண்டும். 5 கிலோ வைக்கோலை சிறு துண்டுகளாக வெட்டி அதன் மீது தண்ணீரில் கலக்கப்பட்ட யூரியா கரைசலை தெளிக்க வேண்டும்.

5 கிலோ என்பது ஒரு கால்நடைக்கு நாள் ஒன்றுக்கு கொடுக்க ஏற்ற அளவாகும். இந்த கரைசலை இளம்கன்றுகளுக்கு கொடுக்கக் கூடாது. அத்துடன் ஒரு மாதத்திற்கு மேல் சேமித்துவைத்து பயன்படுத்தக் கூடாது. மேலும் வைக்கோலுக்கு மட்டுமின்றி பசுந்தீவனத்துக்கும் இந்த கரைசலை பயன்படுத்தலாம்.

யூரியா மூலம் ஊட்டமேற்றும் முறையில் வைக்கோலுக்கு ஊட்டமேற்ற100 கிலோ வைக்கோல், யூரியா 4 கிலோ, சுத்தமான தண்ணீர் 65 லிட்டர் போன்றவை தேவைப்படும். முதலில் யூரியாவை சுத்தமான தண்ணீரில் கரைக்க வேண்டும். பின்னர் பாலித்தீன்தாளை சமதளமுடைய தரையில் விரிக்க வேண்டும். அதன் மேல் 5 கிலோ வைக்கோலை சீராக விரித்து, யூரியா கரைசலைத் தெளிப்பான் கொண்டு தெளிக்க வேண்டும்.

பின்னர் அதன் மீது அடுத்ததாக 5 கிலோ வைக்கோலை நிரப்பி, அதன் மேல் யூரியா கரைசலைத்தெளிக்க வேண்டும். இவ்வாறு 100 கிலோ வைக்கோலையும் அடுக்கடுக்காக நிரப்பிய பின்னர், பாலித்தீன்தாள்களை கொண்டு சுற்றிலும் நன்கு மூடிவிட வேண்டும். இவ்வாறு செய்வதால் வைக்கோலில் இருந்து வெளியேறும் அமோனியா கடினமான நார்ச்சத்தை உடைத்து எளிதாக செரிக்க வைக்கும்.

21 நாட்கள் இவ்வாறு மூடிவைக்கப்பட்ட பின்னர் குவியலை எடுத்து கால்நடைகளுக்கு உணவாக அளிக்கலாம். குவியலில் இருந்து எடுக்கப்பட்ட வைக்கோலை 5 நிமிடம் உலரவைத்து கொடுப்பதால் யூரியாவின் காட்டமான வாசனை போய்விடும். 6 மாத பருவத்தைக் கடந்த கால்நடைகளுக்கு மட்டுமே இதுபோன்று ஊட்டமேற்றிய வைக்கோலை உணவாக கொடுக்க வேண்டும்.

பயன்கள்

வைக்கோலை மேற்கண்ட ஏதேனும் ஒரு முறையில் ஊட்டமேற்றி கொடுப்பதன் மூலம் செரிமான சத்துகளின்அளவு 45 சதவீதத்தில் இருந்து 60 சதவீதமாக அதிகரிக்கிறது. மேலும் கச்சா புரதம் 2 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக அதிகரிக்கிறது. மொத்தத்தில் வைக்கோலின் சுவை கூடுவதால்அதை கால்நடைகள் விரும்பி சாப்பிடுகின்றன.

எனவே கால்நடை பண்ணையாளர்கள் தங்களுக்கு கிடைக்கும் வைக்கோலை அப்படியே கால்நடைகளுக்கு தீவனமாக கொடுக்காமல், ஊட்டமேற்றி பயன்படுத்தி வந்தால் நல்லபலன் கிடைக்கும். பால் உற்பத்தி அதிகரிக்கும். லாபமும் அதிகரிக்கும்!

தகவல்: பி.முரளி, உதவி பேராசிரியர், கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், கடலூர்.

கரும்புத் தோகையை ஊட்டமேற்றுதல்

கரும்பு ஒரு பருவப்பயிர் ஆகும். இதன் அறுவடை காலங்களில் ஏராளமான கரும்பு தோகை கிடைக்கிறது. தோராயமாக ஒரு டன் கரும்புக்கு 150 கிலோ தோகை கிடைக்கும். இத்தோகையை பதப்படுத்திய தீவனமாக மாற்றுவதன் மூலம் வருடம் முழுவதும் பயன்படுத்த முடியும். ஆயிரம் கிலோ கரும்பு தோகையை பதப்படுத்திட கரும்பு கழிவு பாகு அல்லது வெல்லம் 20 கிலோ, சமையல் உப்பு 10 கிலோ, யூரியா 10 கிலோ தேவைப்படுகிறது.

முதலில் கரும்பு தோகையை 1 முதல் 2 அங்குலம் அளவில் சிறு துண்டுகளாக வெட்ட வேண்டும். பின்னர் தயார் செய்யப்பட்ட குழியில் வெட்டப்பட்ட தோகையை அரை அடி அளவுக்கு அடுக்கி வைத்து அதன் மீது உப்பு, யூரியா, வெல்லம், கழிவுப்பாகு கரைசலைத் தெளிக்க வேண்டும்.

ஆயிரம் கிலோ தோகைக்கு தேவையான 10 கிலோ யூரியாவை 20 லிட்டர் தண்ணீரில் கரைத்து 20 கிலோ கரும்பு கழிவு பாகுடன் சேர்த்து குழியின் உயரத்துக்கு ஏற்ப ஒவ்வொரு அடுக்கிற்கும் தெளிக்க வேண்டும். உப்பையும் அதுபோலவே தூவ வேண்டும். குழியின் விளிம்பு வரையில் நிரம்பிய பின் பாலித்தீன் விரிப்பு கொண்டு காற்று மற்றும் மழைநீர் புகாமல் பூசி மொழுகி மூடிவிட வேண்டும். ஒரு மாதத்திற்கு பிறகு திறந்து இதை தீவனமாக பயன் படுத்தலாம். இது பல ஆண்டுகளுக்கு கெட்டுப் போகாமல் அப்படியே இருக்கும்.


Next Story