சங்கராபுரம் அருகே குடும்ப தகராறில் மனைவிக்கு அரிவாள் வெட்டு


சங்கராபுரம் அருகே குடும்ப தகராறில் மனைவிக்கு அரிவாள் வெட்டு
x
தினத்தந்தி 24 Jun 2018 9:30 PM GMT (Updated: 24 Jun 2018 7:36 PM GMT)

சங்கராபுரம் அருகே குடும்ப தகராறில் மனைவியை அரிவாளால் வெட்டிய தொழிலாளியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

சங்கராபுரம்,

சங்கராபுரம் அருகே உள்ள சேஷசமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் மாரிமுத்து மகன் ராஜா (வயது 36), தொழிலாளி. இவரது மனைவி நதியா(32). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். கணவன்- மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக கடந்த சில நாட்களாக தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு நதியா தனது தாய் வசந்தாவிடம் செல்போனில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது குடிபோதையில் வீட்டுக்கு வந்த ராஜா, நதியாவிடம் மீண்டும் தகராறில் ஈடுபட்டார்.

இதில் ஆத்திரமடைந்த ராஜா வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து, நதியாவின் தலையிலும், கையிலும் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதில் பலத்த காயமடைந்த நதியாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதுகுறித்து நதியாவின் தந்தை செல்லமுத்து(58) சங்கராபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான ராஜாவை வலைவீசி தேடி வருகிறார்.

Next Story