தென்பெண்ணையாற்றில் மணல் கடத்தலை தடுக்க பாதையில் பள்ளம் தோண்டிய போலீசார்


தென்பெண்ணையாற்றில் மணல் கடத்தலை தடுக்க பாதையில் பள்ளம் தோண்டிய போலீசார்
x
தினத்தந்தி 25 Jun 2018 4:15 AM IST (Updated: 25 Jun 2018 1:50 AM IST)
t-max-icont-min-icon

தென்பெண்ணையாற்றில் மணல் கடத்தலை தடுக்கும் வகையில், கடத்தல்காரர்கள் செல்லும் பாதையில் போலீசார் பொக்லைன் எந்திரம் மூலம் பள்ளம் தோண்டினர்.

வாணாபுரம்,

வாணாபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியான சதாகுப்பம், வாழவச்சனூர், அகரம்பள்ளிப்பட்டு, தொண்டமனூர் உள்ளிட்ட பகுதி வழியாக செல்லும் தென் பெண்ணை ஆற்றில் இருந்து அதிக அளவில் மணல் கடத்தல் நடைபெற்று வருகின்றது. இதனை தடுக்க போலீசார் தொடர்ந்து ரோந்து பணி மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் போலீசாரால் மணல் கொள்ளையை தடுக்க முடியவில்லை.

இந்த நிலையில் நேற்று திருவண்ணாமலை துணை போலீஸ் சூப்பிரண்டு பழனி தலைமையில் இன்ஸ்பெக்டர் மணிமாறன், சப் -இன்ஸ்பெக்டர்கள் ராமச்சந்திரன், முகமது இஸ்மாயில், சேகர் மற்றும் 10-க்கும் மேற்பட்ட போலீசார் சதாகுப்பம் தென்பெண்ணை ஆற்று பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது மணல் கடத்துபவர்களால் போடப்பட்ட பாதையை போலீசார் பொக்லைன் எந்திரம்மூலம் பள்ளம் தோண்டியும், முள் மற்றும் பாறைகளை போட்டும் வாகனங்கள் செல்லாதவாறு தடுப்பு ஏற்படுத்தினர்.

இது குறித்து துணை போலீஸ் சூப்பிரண்டு பழனி கூறுகையில், மணல் கடத்தலை தடுக்கும் வகையில் பாதையில் பள்ளம் தோண்டப்பட்டது. தொடர்ந்து மணல் கடத்தினால் அவர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் மணல் கடத்தினால் தகவல் தெரிக்க வேண்டும் என்று சதாகுப்பம் பகுதியில் உள்ள பொதுமக்களிடம் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story