பெருந்துறையில் டாஸ்மாக் கடை திறக்க பொதுமக்கள் எதிர்ப்பு


பெருந்துறையில் டாஸ்மாக் கடை திறக்க பொதுமக்கள் எதிர்ப்பு
x
தினத்தந்தி 25 Jun 2018 10:45 PM GMT (Updated: 25 Jun 2018 7:47 PM GMT)

பெருந்துறையில் டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் கோரிக்கை மனு கொடுத்தனர்.

ஈரோடு,

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.

மதுவுக்கு எதிரான மக்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சிந்தனை செல்வன் தலைமையில் தமிழ் புலிகள் கட்சியின் மாநில கொள்கை பரப்பு செயலாளர் விஸ்வநாதன், ஒன்றிய செயலாளர் கார்த்திக் மற்றும் பொதுமக்கள் சிலர் கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்ததாவது:-

பெருந்துறை பவானி ரோட்டில் டாஸ்மாக் கடை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அங்கு மழலையர் பள்ளிக்கூடம், வங்கிகள், கோவில்கள் உள்ளன. டாஸ்மாக் கடை திறக்கப்பட்டால் பொதுமக்களுக்கு பெரும் இடையூறு ஏற்படும் எனவே பெருந்துறையில் டாஸ்மாக் கடை அமைக்கக்கூடாது. மேலும், பெருந்துறையில் ஏற்கனவே செயல்படும் டாஸ்மாக் கடைகளை மூடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறிஇருந்தனர்.

ஈரோடு மாவட்ட மாட்டுவண்டி சுமை தூக்கும் தொழிலாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கொடுக்கப்பட்ட கோரிக்கை மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:-

ஈரோட்டில் சுமார் 500-க்கும் மேற்பட்ட மாட்டு வண்டி தொழிலாளர்கள் ஜவுளி நிறுவனங்களின் துணிகளை கடைகளுக்கு கொண்டு செல்லும் வேலையை செய்து வருகிறார்கள். மாட்டு வண்டியை ஓட்டி செல்வதால் காலதாமதம் ஏற்படுவதோடு போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வருகிறது. எனவே மாட்டு வண்டியில் ஏற்றி இறக்கும் பணியை சரக்கு ஆட்டோ மூலமாக செய்வதற்கு முயற்சி செய்கிறோம்.

பார்சல் அலுவலகங்களில் மாட்டுவண்டியில் கொண்டு செல்லும் ஜவுளி உள்ளிட்ட சரக்குகளை இறக்குவதற்கு அங்கு பணிபுரியும் சுமை தூக்கும் தொழிலாளர்கள் தடுப்பது இல்லை. ஆனால் சரக்கு ஆட்டோவில் கொண்டு சென்றால் நாங்கள் சரக்குகளை இறக்க அனுமதிப்பது இல்லை. மேலும், சுமை தூக்கும் தொழிலாளர்கள் சரக்குகளை இறக்க கூலி கேட்கின்றனர். நாங்கள் மாட்டுவண்டியில் செய்த வேலையை காலத்தின் வளர்ச்சிக்கு ஏற்ப சரக்கு ஆட்டோவை பயன்படுத்தி செய்கிறோம். இதில் சரக்குகளை நாங்களே இறக்கிக்கொள்ள தடுப்பதாலும், அதிகபட்சமான கூலியை கேட்பதாலும் எங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கிறது. எனவே பார்சல் அலுவலகங்களில் சரக்குகளை நாங்களே இறக்குவதற்கு அனுமதிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.

ஈரோடு சங்குநகர் பிரிவை சேர்ந்த சுப்பிரமணி என்பவர் கொடுத்த மனுவில், “ஈரோடு பழையபாளையத்தில் இருந்து சூரம்பட்டிவலசு வரை செல்லும் கீழ்பவானி கிளை வாய்க்காலில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்”, என்று கூறிஇருந்தார்.

இதேபோல் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் மொத்தம் 234 மனுக்களை கொடுத்தனர் இந்த மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கொடுத்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். கூட்டத்தில், 2 பேருக்கு தலா ரூ.10 ஆயிரம் மருத்துவ உதவித்தொகை பெறுவதற்கான உத்தரவும், ஈரோடு, பெருந்துறை, கோபி ஆகிய தாலுகாக்களில் தேர்வு செய்யப்பட்ட 4 விவசாயிகளுக்கு மண் வள அட்டைகளையும் கலெக்டர் பிரபாகர் வழங்கினார்.

இதில் மாவட்ட வருவாய் அதிகாரி கவிதா, சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை கலெக்டர் எஸ்தர்சாந்தி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

ஈரோடு மாநகராட்சி சார்பில் மலேரியா ஒழிப்பு விழிப்புணர்வு கண்காட்சி கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டு இருந்தது. இதில் வீடுகளில் கொசுக்கள் உற்பத்தியாகாமல் தடுப்பது குறித்த மாதிரி வீடு அமைக்கப்பட்டு பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டது. மேலும், மழைநீர் தேங்கும் தேவையற்ற பொருட்கள், லார்வா புழுக்கள், புழுக்களை உண்ணும் மீன்கள் ஆகியன கண்காட்சியில் இடம்பெற்றிருந்தது.

Next Story