டெம்போ வேன் நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்தது டிரைவர், பெண்கள் உயிர்தப்பினர்


டெம்போ வேன் நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்தது டிரைவர், பெண்கள் உயிர்தப்பினர்
x
தினத்தந்தி 26 Jun 2018 11:00 PM GMT (Updated: 26 Jun 2018 8:58 PM GMT)

காரிமங்கலம் அருகே டெம்போ வேன் நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்தது. அதில் இருந்த டிரைவர் மற்றும் பெண்கள் உயிர்தப்பினர்.

காரிமங்கலம்,

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் ஒன்றியம் ஜெகதாப் அடுத்த பங்காதாதன் கொட்டாயை சேர்ந்தவர் மணிவண்ணன் (வயது 37). இவர் சொந்தமாக டெம்போ வேன் வாங்கி ஓட்டி வருகிறார். நேற்று மதியம் காவேரிப்பட்டணத்தில் இருந்து மாங்காய் பாரம் ஏற்றி கொண்டு காரிமங்கலத்திற்கு வந்தார். டெம்போவை மணிவண்ணன் ஓட்டி வந்தார். அங்கு மாங்காய்களை இறக்கிவிட்டு மீண்டும் காவேரிப்பட்டணம் நோக்கி புறப்பட்டார்.

அப்போது ஜெகதாப் பகுதியை சேர்ந்த 15 பெண்கள் காரிமங்கலத்தில் நடந்த துக்க நிகழ்ச்சிக்கு வந்து விட்டு மீண்டும் ஊருக்கு செல்ல பஸ் நிலையம் அருகில் காத்திருந்தனர். அந்த வழியாக வந்த மணிவண்ணனின் டெம்போ வேனை நிறுத்தி ஜெகதாப் செல்ல ஏறிக்கொண்டனர்.

காரிமங்கலம்-காவேரிப்பட்டணம் சாலையில் உள்ள டி-குண்டு அருகே சென்றபோது மணிவண்ணனுக்கு கேபினில் ஏதோ எரிந்து கருகும் வாடை வருவது தெரிந்தது. திடீரென என்ஜினில் இருந்து புகை வர ஆரம்பித்ததும் மணிவண்ணன் உஷாராகி டெம்போ வேனை நடுரோட்டிலே நிறுத்தினார். அதில் இருந்த 15 பெண்களையும் இறங்கும்படி கூறினார். அப்போது என்ஜின் தீப்பற்றி டெம்போ வேன் எரிய தொடங்கியது.

இதனால் தர்மபுரி- கிருஷ்ணகிரி சாலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நடுரோட்டில் டெம்போ வேன் தீப்பற்றி எரிவதை பார்த்ததும் அருகில் கட்டிடப்பணியில் இருந்த தொழிலாளர்கள் ஓடி வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். பாலக்கோடு தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் பெரும் போராட்டத்திற்கு மத்தியில் பொதுமக்கள் மற்றும் கட்டிடத்தொழிலாளர்கள் தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில்் டெம்போ வேனின் முன்பகுதி முற்றிலும் எரிந்து சேதம் ஆனது. தீ பரவும் முன்பே டெம்போவில் இருந்த பெண்கள் இறங்கியதால், அந்த பெண்களும், டிரைவரும் உயிர்தப்பினர்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த காரிமங்கலம் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தேசிங்கு மற்றும் நெடுஞ்சாலை ரோந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து டெம்போவை அகற்றி போக்குவரத்தை சரிசெய்தனர். இதனால் தர்மபுரி- கிருஷ்ணகிரி சாலையில் சுமார் 20 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த சம்பவம் காரிமங்கலம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story