புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் ரூ.1 கோடியில் மேம்பாட்டு பணிகள்


புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் ரூ.1 கோடியில் மேம்பாட்டு பணிகள்
x
தினத்தந்தி 26 Jun 2018 10:45 PM GMT (Updated: 26 Jun 2018 9:19 PM GMT)

‘புராதன நகரம்’ மேம்பாட்டு திட்டத்தின் கீழ் புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் ரூ.1 கோடியில் பல்வேறு மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

சாலியமங்கலம்,

தஞ்சையை அடுத்த புன்னைநல்லூரில் அமைந்துள்ள மாரியம்மன் கோவில் பிரசித்தி பெற்றதாகும். இந்த கோவிலுக்கு தஞ்சை, திருவாரூர், நாகை, அரியலூர் மற்றும் அண்டை மாவட்டங்களில் இருந்தும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து அம்மனை தரிசித்து விட்டு செல்கிறார்கள்.

‘புராதன நகரம்’ மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தஞ்சை மாவட்டத்தில் உள்ள புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலுக்கு ரூ.1 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் மூலம் ரூ.1 கோடியில் பல்வேறு பணிகள் மாரியம்மன் கோவிலில் நடைபெற்று வருகிறது.

இந்த கோவிலின் எதிரில் அமைந்து உள்ள தாமரைக்குளம் குப்பைகள் நிறைந்தும், கழிவு நீர் தேங்கியும் பல ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாமல் இருந்தது. மேலும் தூர் வாரப்படாததால் தண்ணீர் தேக்கி வைக்க முடியாமல் குளம் இருந்த சுவடே தெரியாத அளவுக்கு மண் மேடுபோன்று காட்சி அளித்தது.

இந்த குளத்தை சீரமைக்க வேண்டும் என்று பக்தர்கள், அந்த பகுதி பொதுமக்கள், பொதுநல அமைப்புகள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த கோரிக்கையை ஏற்று இந்த குளத்தை மேம்படுத்த அரசு நடவடிக்கை மேற்கொண்டது. இதனைத் தொடர்ந்து 2017-18-ம் ஆண்டு ‘புராதன நகரம்’ மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.72 லட்சத்து 89 ஆயிரம் மதிப்பில் தாமரை குளத்தை மேம்படுத்தும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

குளத்தை தூர்வாரி ஆழப்படுத்தும் பணியும், குளத்தை சுற்றிலும் நடைபாதை அமைத்தும், பொதுமக்கள் அங்கு அமரும் வகையில் இருக்கைகள் அமைத்தும், புல்வெளி அமைத்தும், குளத்தை சுற்றிலும் மரக்கன்றுகள் நடும் பணியும், குளத்தில் தூய்மையான நீர் நிரப்பியும் மொத்தத்தில் அந்த இடம் அழகுமிகுந்த இடமாக காட்சி அளிக்கும் வகையில் பல்வேறு பணிகள் நடைபெற உள்ளது.

இதேபோல் கோவிலுக்கு பக்தர்கள் கார், வேன், பஸ் போன்ற பல்வேறு நான்கு சக்கர வாகனங்களிலும், இரு சக்கர வாகனங்களிலும் வந்து செல்கிறார்கள். இவ்வாறு வரும் பக்தர்கள் கோவிலுக்கு முன்பு தங்களது வாகனங்களை நிறுத்தி விட்டு செல்வதால் அடிக்கடி அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இந்த போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் கோவிலின் பின்புறம் ரூ.8 லட்சம் மதிப்பில் கார்கள் மட்டும் நிறுத்தும் வகையில் ‘கார் பார்க்கிங்’ அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மேலும் கோவிலின் எதிரில் சாலையோரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வரையிலும் சாலை அகலப்படுத்தப்பட்டு அதில் ‘பேவர் பிளாக்’ கற்களினால் ஆன தரை தளம் அமைக்கும் பணி ரூ.10 லட்சத்து 49 ஆயிரம் மதிப்பில் நடைபெற்று வருகிறது. இந்த பணி முடிவடையும் தருவாயில் உள்ளது. 

Next Story