கியாஸ் கசிந்ததால் வீடு தீப்பிடித்து எரிந்தது அதிர்ஷ்டவசமாக 3 பேர் உயிர் தப்பினர்


கியாஸ் கசிந்ததால் வீடு தீப்பிடித்து எரிந்தது அதிர்ஷ்டவசமாக 3 பேர் உயிர் தப்பினர்
x
தினத்தந்தி 1 July 2018 11:00 PM GMT (Updated: 1 July 2018 9:57 PM GMT)

மோகனூர் அருகே கியாஸ் கசிந்ததால் வீடு தீப்பிடித்து எரிந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக 3 பேர் உயிர் தப்பினர்.

மோகனூர்,

மோகனூர் அருகே உள்ள கீழ்பாலப்பட்டி கிழக்குத்தெருவை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 43). கூலித்தொழிலாளி. இவர் தனது தாயார் மூக்காயி (65), சகோதரி மகன் மோனிஷ்குமார் (12) ஆகியோருடன் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று காலை மூக்காயி சமையல் செய்வதற்காக அடுப்பை பற்ற வைக்க முயன்றார். அப்போது எதிர்பாராதவிதமாக சிலிண்டரில் கியாஸ் கசிவு ஏற்பட்டு திடீர் தீ விபத்து ஏற்பட்டது. வீட்டில் இருந்த சிவக்குமார், அவரது தாயார், சகோதரி மகன் ஆகியோர் வெளியே ஓடி வந்தனர். இதனால் அதிர்ஷ்டவசமாக அவர்கள் 3 பேர் உயிர் தப்பினர். தீ மளமளவென பரவியதால் வீடு தீப்பிடித்து எரிந்தது.

இது குறித்து நாமக்கல் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் அவர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் வீட்டில் இருந்த ரொக்க பணம் ரூ.37 ஆயிரம், குடும்ப அட்டை, ஆதார்கார்டு, அரிசி, துணிமணிகள் ஆகியவை எரிந்து சேதம் அடைந்தன. தகவல் அறிந்த மோகனூர் போலீசார், கொமாரபாளையம் கிராம நிர்வாக அலுவலர் தவமணி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். பின்னர் அவர்களுக்கு வேட்டி, சேலை வழங்கி நிவாரண உதவி பெற உயர்அதிகாரிகளுக்கு சேதம் விவரம் குறித்து தகவல் கொடுத்து உள்ளனர். 

Next Story