தினம் ஒரு தகவல் : நாய்களுக்கான உணவு


தினம் ஒரு தகவல்  :  நாய்களுக்கான உணவு
x
தினத்தந்தி 3 July 2018 8:58 AM GMT (Updated: 3 July 2018 8:58 AM GMT)

நாய்களுக்கு உணவு அளிப்பதில் எவ்வித காலதாமதமும் ஏற்படக்கூடாது. சாதாரணமாக தினசரி நாய்களுக்கு 8 மணி நேர இடைவெளியில் 3 முறை உணவு அளிக்கலாம்.

நாய்களுக்கு காலை நேரத்தில் பாலும், இரவில் அளவான உணவும், நடுப்பகலில் நல்ல சத்தான உணவும் தேவைக்கேற்றவாறு அளிக்கலாம். இடையில் நாய்களுக்கு சிறிதளவு ரொட்டி, பிஸ்கெட்டுகள் அளிக்கலாம். நாய்களுக்கு மோப்ப உணர்வு அதிகமாக உள்ளதால் அவைகளுக்கு அளிக்கப்படும் உணவினை முதலில் முகர்ந்து பார்த்துப் பின்னர் உண்ணும். ஆகவே, அவற்றிற்கு அளிக்கப்படும் உணவு எந்த வகையான உணவாக இருந்தாலும் சுத்தமான புதிய உணவாக இருக்க வேண்டும்.

உணவு சத்தானதாகவும் இருக்க வேண்டும். நாய்களுக்கான உணவில் 40 சதவீதம் இறைச்சி, 30 சதவீதம் காய்கறி மற்றும் 30 சதவீதம் மாவுச்சத்துக்கான பொருட்கள் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். சைவ உணவு கொடுக்கும்போது இறைச்சிக்குப் பதிலாக பயறு வகைகள் மற்றும் பருப்பு வகைகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். கெட்டுப்போன உணவுப் பண்டங்களை உபயோகித்தல் கூடாது. உண்டு முடித்த பின்னர் மீதமுள்ள உணவை மீண்டும் பயன் படுத்தக் கூடாது.

செல்லப் பிராணிகளாக வளர்க் கப்படும் நாய்களுக்கு அந்நியர் தரும் உணவினை பயன் படுத்தக் கூடாது. மேலும், தெருக்களில் எறியப் படும் உணவுப் பண்டங்களை சாப்பிட நாய்களை அனுமதிக்கக் கூடாது. கோடை காலத்தில் நாய்கள் குறைந்தளவே உணவு உட்கொள்ளும். ஆகையால் சைவ உணவு உட்கொள்ளும் நாய்களுக்கு தேவையான அளவு எரிசக்தி கிடைப்பதில்லை. இந்த நேரங்களில் உணவுடன் சிறிதளவு வெண்ணெய் அல்லது எண்ணெய் வகைகளை சேர்த்துக் கொள்ளலாம்.

உணவுடன் தாது மற்றும் உயிர்ச்சத்துகள் கொடுக்க வேண்டும். தேவைக்கு அதிகஅளவு கால்சியம், மீன் எண்ணெய் கொடுப்பதால் எலும்புக் கோளாறுகள் ஏற்படும். வாசனைப் பொருட்கள் மற்றும் நொறுக்குத்தீனிகளை தவிர்க்க வேண்டும். உணவு வகைகளையும், உணவிடும் நேரத்தையும் அடிக்கடி மாற்றம் செய்தல் கூடாது.

நாய்களுக்கு கொடுக்கப்படும் சில உணவுகள் கெடுதலை தரும். சாக்லேட், காபி மற்றும் டீ போன்றவற்றில் உள்ள புரோமின் என்னும் வேதிப்பொருள் நாய்களின் இதயம் மற்றும் நரம்பு மண்டலத்தை பாதிக்கும். இவற்றை சாப்பிடும் பொழுது நாய்களுக்கு சோர்வு, வாந்தி மற்றும் ரத்தப்போக்கு ஏற்படும். திராட்சை மற்றும் உலர் திராட்சைகளை நாய்கள் சாப்பிட்டால் சிறுநீரகத்தை பாதிக்கும்.

செயற்கை இனிப்பு கலந்த உணவுகளை எக்காரணம் கொண்டும் நாய்களுக்கு கொடுக்கக்கூடாது. இவை சிறுநீரகத்தை பெரிதளவு பாதிக்கும். வேக வைக்காத இறைச்சியை நாய்கள் சாப்பிட்டால் அவற்றில் உள்ள நுண்ணுயிர் கிருமிகள் நாய்களுக்கு வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தியை ஏற்படுத்தும். நாய்களுக்கு உப்பு அதிகம் உள்ள உணவை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் இவை நாய்களின் உடலில் வறட்சியை ஏற்படுத்தும். இதேபோல் வெங்காயம் மற்றும் பூண்டு அதிக அளவில் சேர்த்தால் ரத்தச் சோகை ஏற்பட்டு உடல் ஆரோக்கியம் கெடும். 

Next Story