மாணவ-மாணவிகள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்


மாணவ-மாணவிகள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 4 July 2018 11:15 PM GMT (Updated: 4 July 2018 9:08 PM GMT)

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் இளங்கலை பட்டப்படிப்பு படிக்கும் மாணவ-மாணவிகள் இணையதளம் மூலம் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் ஹரிகரன் அறிவித்து உள்ளார்.

கோவை,

இது குறித்து அவர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் வகுப்பை சேர்ந்த மாணவ- மாணவிகளுக்கு தமிழக அரசு பல்வேறு திட்டங்களின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவ-மாணவிகளுக்கு எவ்வித நிபந்தனையுமின்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. முதுநிலை, பாலிடெக்னிக், தொழிற்படிப்பு போன்ற பிற படிப்புகளுக்கு பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

மாணவ-மாணவிகள் கல்வி உதவித்தொகைக்கான விண்ணப்ப படிவங்களை அவர்கள் பயிலும் கல்வி நிறுவனங்களிலேயே பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வருகிற 15.10.2018-க்குள் உரிய சான்றுகளை இணைத்து அவரவர் படிக்கும் கல்வி நிலையங்களில் சமர்பிக்க வேண்டும்.

விண்ணப்பபடிவத்தில் மாணவர்கள் தங்களின் வங்கி கணக்கு எண் விவரங்களை தவறாது குறிப்பிட வேண்டும். கல்வி நிறுவனங்கள் புதுப்பித்தலுக்கான விண்ணப்பங்களை 15.10.2018-ம் தேதிக்கு முன்பும், புதிய விண்ணப்பங்களை 30.11.2018 -ம் தேதிக்கு முன்பும் இணையதளம் மூலம் சமர்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகவும். இதுதவிர www.tn.gov.in/ bcmbcdept என்ற இணைய தளத்தில் இந்த திட்டங்கள் குறித்து விவரங்கள் மற்றும் விண்ணப்ப படிவங்கள் உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story