அய்யலூரில் மதுபாட்டில்களை சாலையில் உடைத்து பெண்கள் போராட்டம்


அய்யலூரில் மதுபாட்டில்களை சாலையில் உடைத்து பெண்கள் போராட்டம்
x
தினத்தந்தி 4 July 2018 11:08 PM GMT (Updated: 4 July 2018 11:08 PM GMT)

அய்யலூரில் மது விற்பனை செய்தவரிடம் இருந்து மதுபாட்டில்களை பிடுங்கி சாலையில் உடைத்து பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வடமதுரை,

திண்டுக்கல் மாவட்டம், வடமதுரையை அடுத்த அய்யலூரில், திண்டுக்கல்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் அருகே அரசு மதுபானக்கடை ஒன்று செயல்பட்டு வந்தது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் படி சாலையோரத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள் அகற்றப்பட்டன. அப்போது அய்யலூரில் செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடையும் அகற்றப்பட்டது.

ஆனாலும் அதன்பின்னர் அய்யலூரில் சில பகுதிகளில் சட்ட விரோதமாக மதுபானம் விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. 24 மணி நேரமும் மதுபானம் விற்பனை நடந்து வந்தது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்பேரில் வடமதுரை போலீசாரும் மது விற்பனையில் ஈடுபடுவோர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்து வந்தனர். ஆனாலும் மது விற்பனையை முழுமையாக தடுக்க முடியவில்லை.


இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை அய்யலூர் பகுதியில் மது விற்பனை செய்த ஒருவரை அப்பகுதி பெண்கள் மடக்கி பிடித்தனர். பின்னர் அவர் விற்பனைக்காக வைத்திருந்த மது பாட்டில்களை பிடுங்கி சாலையில் உடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்ததும் வடமதுரை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர். மேலும் மது விற்பனையில் ஈடுபட்ட குருந்தம்பட்டியை சேர்ந்த ஆனந்தகுமார் (வயது 23) என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

Next Story